Sunday, April 14, 2013

தன்மைக்கு மரம் இரை!

  

   பங்குனி மாதத்தின் இருபத்தேழாம் நாள் மாலையில் இதை எழுதுகிறேன்.“ப்பா, போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி”. ஒவ்வொரு ஏப்ரல் மேயும் இதே வாக்கியத்தைத்தான் தாங்கிக்கொள்கின்றன! எண்ணெய் முடிந்த விளக்கு அனைந்து போவதைப்போல் ஹீலியமும், ஹைட்ரஜனும் குறையக் குறைய சூரியன் நம்மை நெருங்கிக்
கொண்டுதான் இருப்பான்! வெயிலும் அதிகமாகித்தான் போகும்!

  சோம்பல் கூடிப்போன நம் ரத்தம், பக்கத்துத் தெரு மளிகைக்கடை  செல்லவும், ஊளச்சதைக்குறைக்க உடற்பயிற்சி நிலையம் செல்லவும்கூட மகிழுந்தையும்(Car), இருசக்கர வாகனத்தையும் நாடுவதின் மீதான எள்ளலை பதிவு செய்வதை விட, அந்த வாகனப்புகையில் உள்ள கரியமில வாயு இப்பூமிக்கிழைக்கும் அரும்பெறும் தீமையை அறிந்தும் அதையே செய்வோரை என்ன சொல்லி எள்ளல் செய்ய?!

   அன்றாட வாழ்வின் இன்றியமையா பொருளாகிப்போன குளிர் பதனப்பெட்டி வெளியிடும் chloro fluro carbon (cfc) பூமிக்கிழைக்கும் தீமையை நம்மில் எத்தனைப்பேர் அறிந்திருப்போம்?!

    கரியமில வாயு கலந்த குப்பைக்காற்று வானத்து தகடுகளுள், சூரியன் வெளியிடும் புறஊதாக் கதிர்களை(Ultra-Violet Rays)  நம் தோல்மேல் படாமல் வடிகட்டும் மிகமுக்கிய தகடான ஓசோன் தகட்டிலேயே ஓட்டைவிழ நாமே காரணமாகிப்போவதன் முடிவு Rickets, Skin cancer போன்ற தோல் நோய்களை நமக்குத் தருவதைத்தான் அன்றே ந்யூட்டன் சொன்னான் போலும் Every Action has an Equal and opposite Reaction என!

 இந்த கரியமில வாயுவைத்தான் மரங்கள் தங்களின் ஜீவ வாயுவாய் கொண்டிருக்கின்றன, நமக்கு பிரான வாயு போல! விளை நிலம் வீட்டு மனையாவது, எப்படி நம் விவசாயத்தை பாதிக்குமோ; அதேபோல் மரங்களை அழிப்பது நம் உயிர் நிலையை அழிக்கவல்லதென, நாம்
ஏன் அறிந்திருக்கவில்லை!

  ஓ! அறிந்திருக்கிறோம்(?)! அதனால் தான் வீட்டின் முகப்புக்கும் சுவற்று
வர்ணத்துக்கும் ஒத்தாற்போல் நிழலில் வாழும் செடிகளையும், சிறகொடிந்த போன்சாய் மரங்களையும் தொட்டியில் போட்டு வளர்க்கிறோம் இல்லையா?!

 எத்தனையோ அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் ஆனதென போகும் வழியில் மரத்தை நட்டு வைப்பதும், அதனை ஆடும் மாடும் இரையாக்கிக் கொள்வதும் நாமறிந்தவைதான் இல்லையா?!

  என் இனிய ப்ளாட் வாசிகளே! “காரும்” , “இரு சக்கர வாகனமும்” நிறுத்திவைக்க இடம் கொண்டிருக்கும் நம் ப்ளாட்களின் அடித்தளங்கள்தான் ஒரு மரத்துக்கு இடம் தருவதில்லை!

  வீட்டு முகப்பின் அலங்கார விளக்குக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தெருவோர மரத்தை வெட்டுவதிலும்,



  சருகை சுத்தம் செய்ய சோம்பல் கொண்டு அடுத்த வீட்டு மரத்தை வெட்டச்சொல்லி சண்டையிடுவதிலும், தன் வீட்டு மரத்தை வெட்டுவதிலும் அவர்களின் பூமி மீதான பசுமைப் பாசத்தை(?) விளக்குவதாகத்தான் உள்ளது!

  விடுமுறைக்கென ஆயிரம் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைப்போல
தோட்டக்கலையையும் பிள்ளைகளுக்கு பழக்கிவிடலாம் இல்லையா?! இவ்ளோ சொல்றியே “நீ”என்பது உங்கள் கேள்வியாய் இருப்பின், வீதி தொடங்கி வீட்டின் முடிவு வரை மண்ணே அல்லாத சிமெண்ட், தரையை கொண்ட என் பழைய வீட்டில் கிடைத்த இடத்தில் எல்லாம் நான் நட்ட மரங்களை சருகுக்கு எரிச்சல் பட்டுக்கொண்ட வெட்டச் சொன்ன அண்டை
வீட்டார் நானில்லாத பொழுதுகளில் கனியை களவாடி உண்ணத்தான் செய்தார்கள்! இன்று நான் வாழும் வீட்டிலும் என் இளம் ப்ராயத்தில், பாட்டி சொல்லி நான் விதைத்த மா, நெல்லி, மரங்களோடு நானாக விதைத்த வேப்பமரமும் தன் வேர் சேமித்த நீரை தான் அழிந்தாலும் என் மகளுக்கு நிலத்தடி நீராய் விட்டுச்செல்லத்தான் செய்யும்! மரம் நன்றியுள்ளது!

 காருக்கு ஒதுக்கியதைப்போல் “கார்மேகத்துக்கு” விதையாகும் மரத்துக்கும் இடம் ‘நான்’ கொடுத்துவிட்டேன்! நீங்கள்?

-மீறு - @Narumugai_

7 comments:

  1. மிக பயனுள்ள பதிவு என்பது சம்பிரதாய வார்த்தை! மிக அவசியமான பதிவு!!

    சரளமான வார்த்தைப் பிரயோகங்கள்! தேர்ந்த, தெளிவான எழுத்துநடை!
    தொடர்ச்சியாய் எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. அருமை. அருமை சகோதரி.
    வாழ்த்துகள் .

    ReplyDelete
  3. அருமை. அருமை சகோதரி.
    வாழ்த்துகள் .

    ReplyDelete
  4. வரிகளும் வார்த்தைகளும் aaழமாக உள்ளது,. வாழ்த்துக்கள்.மிகவும் aருமை..

    ReplyDelete
  5. "பழைய வீட்டில் கிடைத்த இடத்தில் எல்லாம் நான் நட்ட மரங்களை சருகுக்கு எரிச்சல் பட்டுக்கொண்ட வெட்டச் சொன்ன அண்டை
    வீட்டார் நானில்லாத பொழுதுகளில் கனியை களவாடி உண்ணத்தான் செய்தார்கள்!" #உண்மை #அருமை.. @Iamkeechan

    ReplyDelete