Saturday, September 15, 2012

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு – இது சில ஆண்டுகளாய் பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு வேண்டாம் என பொது மக்களில் பெரும் பகுதியினர் கதறினாலும் வழக்கம் போல காங்கிரசு அரசால் கண்டுகொள்ளப்படாமல் சட்டமாக்கப்ட்டுள்ளது.

சில்லறை வணிகத்தை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒரு நிறுவனப் பொருட்களின் சில்லறை வணிகம்(Single Brand Retail) (உதாரணம் – நோக்கியா விற்பனையகம்) பல நிறுவனங்களின் சில்லறை வணிகம்(Multi-Brand Retail)(உதாரணம் – Univercel Showrooms).

இன்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீடுகளின் அளவுகளை அதிகப் படுத்தியுள்ளது. ஒரு நிறுவன சில்லறை வணிகத்தில் 51% முதல் 100% வரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது புதிய சட்டம். பல நிறுவன சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51% வரை உயர்த்தியிருக்கிறது இந்த சட்ட திருத்தம்.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். இதன்மூலம் அந்நிய முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறோம், வேலை வாய்ப்பை அதிகப்படுத்துகிறோம், இடைத்தரகர்களை நீக்கி விவசாய பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வழி செய்கிறோம் போன்ற விஷயங்களை பெருமையாக கூவுகிறது காங்கிரஸ் அரசு.

விஷ்யத்திற்கு வருவோம். வழக்கம் போல் நான் இந்த கட்டுரையை சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை குறை கூறவே எழுதுகிறேன். அதற்கு முன் ஒரு சின்ன விஷயம்.

அந்நிய முதலீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. 1000ரூபாயை முதலீடு செய்து அதன் மூலம் வியாபாரம் செய்து வருடாவருடா வரும் நம் மக்களிடமிருந்து 10,000ரூபாயை லாபமாக தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி வகுப்பதுதான் நான் அறிந்த அந்நிய முதலீடு.

இதை இப்போது அடித்தட்டு வணிகமான சில்லறை வணிகத்தில் அனுமதித்திருப்பதன் மூலம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயலாகவே இது தெரிகிறது. இதன் மூலம் நாம் மளிகை பொருள் வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. நம் மக்களின் வாங்கும் சக்தியிலிருந்து லாபம் பார்த்த உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து பிடுங்கி அந்த லாபத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறது இந்த சட்டம். முதலில் பணம் இந்தியாவில் இருந்தது, இதில் இந்தியாவை விட்டு போய்விடும்.

இந்த சில்லறை வணிக நிறுவனங்கள் பொருளாகவோ, உதிரி பாகங்களாகவோ 30% உள்ளுர் கொருட்களை கொள்முதல் செய்யவேண்டும் என விதி இருக்கிறது. இதன் மூலம் உள்ளூர் சிறுதொழில் வளரும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் அதிலும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பல ஓட்டைகள். உயர் தொழில்நுட்பம் சம்பந்தட்ட கொருட்களை விற்கும் நிறுவனங்கள் இந்த விதியை கடைபிடிக்க வேண்டி இருக்காது. உதாரணத்துக்கு ப்ளாக்பெர்ரி மொபைல் உள்ளூரில் தயாரிக்கும் எதையும் பயன்படுத்த முடியாது. ஆகவே எல்லாவற்றையும் தருவித்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தி அனைத்து நிறுவனங்களும் 30% உள்ளூர் கொள்முதல் என்ற விதியை கடைபிடிக்கப் போவதில்லை. மேலும் இந்த 30% கொள்முதல் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் ஆரம்பகால மூலதனம் 1 மில்லியனாக இருந்திருக்க வேண்டுமாம். அதாவது சுமார் 6கோடி ரூபாய்கள். இவைதான் சிறுதொழில் நிறுவனகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் முக்கால்வாசி மிகப்பெரிய நிறுவனங்களின் துணை நிறுவனங்களாகவே இருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.

அடுத்தது விவசாய பொருட்களுக்கு அதிக விலை. இதைப்போல ஒரு ஏமாற்றுவேலை எங்கும் இருக்க முடியாது. அரசாங்கத்தின் விவசாயப்பொருள்  கொள்முதல் செய்யும் கமிட்டிகளில் அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயிகளிடம் வாங்கும் வியாபாரிகளே தங்களுக்குள் பேசிவைத்துக் கொண்டு அநியாயமாக அடி மாட்டு விலைக்கு பொருட்களை வாங்குகிறார்கள். பன்னாட்டு பெரிய முதலாளிகள் இதை மேலும் அடாவடியாகத்தான் செய்வார்கள். மேலும் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்பதும் பொய்யே. அந்த இடைத்தரகர்களின் வேலையைத்தானே இவர்களின் பர்ச்சேஸ் துறை(Purchase Dept) அதிகாரிகள் செய்கிறார்கள். அவர்களின் சம்பளம் என்பது யாரிடமிருந்து எடுத்து வழங்கப்படும்.? கரும்பு என்பது சர்க்கரை ஆலைகளின் நேரடி கொள்முதல்தான். ஆனாலும் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் லாபம் அளிக்கவில்லை. மேலும் முதலில் சந்தைக்குள் நுழைய அதிக பணம் கொடுத்தாலும் பின்னர் விவசாயிகளை அவர்கள் சொல்படி ஆட்டி வைக்கும் வேலைதான் நடக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இவ்வாறு கட்டுப்படியாகாத விலையால் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி சமாதானம் செய்கிறது அங்கத்திய அரசு.

அடுத்தது அதிக வேலை வாய்ப்பு என்பதுதான் மிகப் பெரிய பொய். வால்மார்ட், டெஸ்கோ போற நிறுவனங்கள் தம்தம் ஊரில் ஆட்குறைப்பு செய்கின்றன. இடைத்தரகர்கள் என் அழைக்கப்படும் மொத்த வியாபாரி, கொள்முதல் செய்யும் வியாபாரி, சில்லறை வியாபாரி, கடைக்காரர், கடையில் வேலை செய்பவர்கள் என எல்லோரையும் வேலையாட்களாக கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் புரியும். இது புது வேலைவாய்ப்புக்களை உருவாக்குமா அல்லது இருக்கிற வேலை வாய்ப்புகளை குறைக்குமா என.

மேலும் பல குளறுபடிகள் இருக்கிறது இந்த சில்லறை வனிகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்பதில். ஆக மொத்தம் இந்தியாவை கூறுபோட்டு விற்றுவிட்டுதான் காங்கிரஸ் அரசு ஓயும் என்பது உறுதியாகிறது. மீண்டும் ஒரு வகையான காலணிவாத ஆதிக்கத்திற்கு நம்மை நாமே விரும்பியே ஆட்படுத்துகிறோம்.

இந்த சில்லறை வணிகத்தை கூட்டுறவு முறைப்படி விவசாயத்தையும் அதில் முழுதாய் இணைத்து சரியாய் திட்டம் தீட்டி செயல்படுத்த ஏன் இந்த அரசாங்கம் முன்வரவில்லை. செம்மையாய் செயல்பட்டுவந்த அரசாங்க ஊழியர்களின்/இராணுவ வீர்ர்களின் கூட்டுறவு சில்லறை விற்பனையகங்கள் ஏன் விரிவாக்கவில்லை அதை.?


-செந்தில்நாதன்  @senthilchn

Thursday, September 13, 2012

B.R.மகாதேவனின் "மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி" -என் பார்வையில்..


மணிரத்னத்தை சகட்டுமேனிக்கு விமர்சிக்க வேண்டுமென்று முன்முடிவெடுத்த பின்பு கட்டுரையாசிரியர் இப்புத்தகத்தை எழுத ஆரம்பித்திருப்பது போல நானும் என்னுடைய முன்முடிவை முதலிலேயே சொல்லிவிடுதல் உத்தமம்- ஆம்.. இப்புத்தகத்தை கடும் காட்டத்துடன் விமர்சிப்பதே இப்பதிவின் அஜித்'தாய நோக்கம்.


ஒரு படைப்பை எந்த எல்லைவரை விமர்சிக்கலாம்.? என்னளவில்- படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்தில் தலையிடாமல் எந்த எல்லைவரை வேண்டுமானாலும்.  இந்த முதல் பாயிண்டிலேயே அடிவாங்கி விடுகிறது இந்த விமர்சனத் தொகுப்பு. மணியின் படங்களை விமர்சனம் என்கிற பெயரில் சகட்டுமேனிக்கு குதறி வைத்து, குடலாப்பரேஷன் செய்தவரைக்கும் கூட ஓகேதான் . ஆனால் மணியின் இடத்தில் நானாக இருந்திருந்தால் மலையை புரட்டியிருப்பேன்..கடலைக் குடித்திருப்பேன் என்கிற ரேஞ்சுக்கு இவர் முன்வைக்கும் மாற்று திரைக்கதைதான் அதீத எரிச்சலூட்டுகிறது.

ஒரு படம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என விமர்சிப்பது ஓகே. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுகூட ஓகே ஓகே.. ஆனால் இயக்குனரின் இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படியெல்லாம் எடுத்திருப்பேன் என்றெல்லாம் விமர்சிப்பது என்ன மாதிரியான மனோநிலை.? ஒருவரின் கற்பனை இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுக்க எவருக்கும் உரிமையில்லை. அதிலும் கற்பனை காண்பவர் இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பேன் என்றெல்லாம் எழுதிக்கொண்டே போவது, நீலப்படம் பார்க்கும் ஒருவன் நடிப்பவன் இடத்தில் நான் இருந்திருந்தால் எவ்வாறெல்லாம் புணர்ந்திருப்பேன் என  வெற்றுத்தாளில் பக்கம் பக்கமாக எழுதி புத்தகமாக அச்சடித்து பெட்டியில் வைத்து பூட்டிக் கொள்வதற்கு ஒப்பானது.

உண்மையில் இவர் மாற்றாக வைக்கும் திரைக்கதையில் சில சம்பவக் கோர்வைகள் அசலை விட நன்றாகவே இருந்தாலும், அடுத்தவரின் கற்பனையில் உதித்த கருவில் புகுந்து இவர் கண்டமேனிக்கு கருத்து சொல்லி, கருந்தேள் கண்ணாயிரத்தனமாய் விமர்சிப்பதை என்னால் துளியளவும் ஒப்புக்கொள்ளவே இயலவில்லை. போக, ஒரு திரைக்கதையை நன்றாக எழுதுவதால் மட்டுமே அது சிறந்த திரைக்கதையாகி விடாது; பல இடையீடுகளை கடந்து திரையிலும் சிறப்பாக காட்சிப்படுத்தினால் மட்டுமே எழுதியவரின் மேதமைத்தனத்தை ஒப்புக்கொள்ள முடியும்.


மணியில் லாஜிக் சொதப்பல்களை  நூத்தினாலு பக்கத்துக்கு விவரித்துவிட்டு அதற்கு மாற்றாக இவர் முன்வைக்கும் மாற்று திரைக்கதையிலும், சம்பவக் கோர்வைகளிலும் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை எழுதினால் இதே சைஸில் இன்னுமிரண்டு புத்தகம் தேறும். மணியின் வியாபார தந்திரங்கள் பற்றி பேப்பர் கிழிய எழுதித் தள்ளியிருக்கும் இவருக்கு, புத்தகத்தின் முன்னட்டையில் பெரிய சைஸ் மணிரத்னத்தின் புகைப்படத்தை போட்டு வெளியிட்டிருப்பது அப்பட்டமான, மணியின் பெயரை வைத்து புத்தகத்தை விற்க நினைக்கும் கீழ்த்தரமான வியாபார உத்தி என்பது தெரியாமல் போனதா.? புத்தகத்தலைப்பைக் கூட கன்னத்தில் முத்தமிட்டால் பட டைட்டில் டிசைனை ஞாபகப்படுத்தும் ஃபான்ட் ஸ்டைலிலேயே அச்சடித்திருக்கிறார்கள். என்ன சொல்ல.??

கடைசியாய், ஒரேயொரு கேள்வி மட்டும் புத்தகாசிரியரிடம்- "உங்க படம் எப்போ சார் வருது.?" ( ஒரு படைப்பை விமர்சிப்பனிடம், "முடிந்தால் இதுபோல் உன்னால் உருவாக்க முடியுமா.?" என்கிற ரீதியிலான மொன்னைத்தனமான வாதங்களில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லையெனினும், இதில் ஆசிரியரே அசலுக்கான மாற்றையும் சொல்லத்தொடங்கும்போதே இம்மாதிரியான கேள்விகளுக்கான அனுமதியை அவரே வழங்கிவிடுகிறார். இந்தப் புத்தகத்தை பொருத்தவரையிலும் இது மிக அவசியமான கேள்வியுங்கூட)

டிஸ்கி-1 :இப்பதிவை வாசிக்கும்போது நான் மணிரத்னத்தின் பரம தொண்டன் என்கிற தோற்றம் எனக்கே வருகிறது. வெல்...எனக்கு மணி பிடித்தாலும் ஒரு ரசிகனாக அவர் மீது சில விமர்சனங்களும் உள்ளன. ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான, தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் அல்ல.

டிஸ்கி-2 : இந்த புத்தகத்தின் பதிப்பாளர் உரையை தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்.மாற்று விமர்சனக்கலையில் இப்புத்தகம் உலகினுக்கே முன்மாதிரி; திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் இதை தங்கள் பூஜையறையில் வைத்து போற்ற வேண்டும் என்கிற ரீதியில் யாரோ ஒரு புண்ணியவான் பதிப்பாளர் எழுதியிருக்கும் முன்னுரையானது சிரிப்பொலி, ஆதித்யா'க்களின் அச்சுவடிவம்.


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


Saturday, July 14, 2012

சென்னை அரசு பொது மருத்துவமனை- ஒரு சாதாரணனின் பார்வையில்..

கடந்த வியாழனன்று உறவின நண்பரொருவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறுவதற்காக சென்னை சென்ட்ரல் எதிரேயுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. காலை எட்டு மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை அங்கிருந்த அத்தனை நேரம்  முழுக்கவே கசப்பான அனுபவங்கள்.

முதலில் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் வெளியூரிலிருந்தோ, உள்ளூரி
லிருந்தோ வரும் பார்வையாளர்கள்/ நோயாளிகளுக்கு சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட அங்கு ஒருவருமே இல்லை. சிறுநீரகவியல் துறையை தேடிப்பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. வாசலிளிருந்த காவலரிடம், "கிட்னி சம்பந்தமான டிப்பார்மென்ட் எங்கேருக்கு'ண்ணே.. யாரை பார்க்கணும்.?"  "மேல போயி பாருங்க.." 
மேலே சென்று குங்குமம்- புதுசு கண்ணா புதுசு படித்துக் கொண்டிருந்த ஒரு நர்சிடம்.. "எக்ஸ்க்யூஸ்மீ சிஸ்டர்.. இந்த நெஃப்ராலாஜி.." புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல், "அவங்களைப் போய் பாருங்க.." கை மட்டும் இடது புறம் காட்டியது. கைகாட்டிய திசையில் சென்று, "சிஸ்டர்..நெஃப்ராலாஜி டிபார்ட்மென்ட் எங்கேருக்கு.?"  "எனக்குத் தெரியாதுங்க.."  சுத்தம்.. 
வேறு ஒரு மருத்துவமனை ஊழியரை அண்ணே என வழிமறித்து திரும்பவும் அதே பல்லவி.. "நீங்க கீழ ஒ.பி. வார்டுல போயி பாருங்க சார்.." 
 

-யோசித்துப்பாருங்கள்.. வெறுமனே தகவல்கள் பெற வந்த எங்களுக்கே இந்த நிலைமையெனில், சிகிச்சைக்காக தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து தினமும் கிளம்பி வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் கதி.??

ஒரு வழியாக ஒ.பி வார்டை கண்டறிந்து அங்கு சென்றால்....  அவுட் பேஷன்ட் அட்மிஷனுக்கு அனாயசமாக நூறு ரூபாய், டோக்கன் க்யூவில் முந்திச்செல்ல எல்லோர் முன்னிலையிலும் சிறிதும் வெட்கமின்றி ஐம்பது ரூபாய் லஞ்சம்.. அடடா.. எங்கெங்கிலும் லஞ்சம் தலை, கை,கால் என அனைத்தையும் விரித்தாடுகிறது. போததற்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முந்திச்செல்ல அனுமதித்ததை கேட்ட ஒன்றிரண்டு பேரை திமிருடன், தரக்குறைவாக பேசிய கொடுமையும் நடந்தது.


மருத்துவர்களின் அலப்பறை அதற்கும் மேல். விசிட்டிங் ஹவர் 10 AM - 1 PM. பணிக்கு வந்ததே பதினோரு மணிக்கு. சரியாக ஒரு மணியானதும், இன்னமும் க்யூவில் காத்திருக்கும் பல நோயாளிகள் பற்றிய கிஞ்சித்தும் கவலையுறாமல் கடையை சாத்திவிட்டு கிளம்பி விட்டனர். 


நோயாளிகளை அட்டென்ட் செய்வது இன்னும் கொடுமை. அங்கிருந்தது  ஒரு சீனியர். மூன்று இளம் மருத்துவர்கள் உட்பட மொத்தம் ஆறு மருத்துவர்கள். பொதுவாக அங்கிருந்த இளம் மருத்துவர்களிடம் நோயாளிகளை கனிவாக அணுகும் முறை சிறிதும் காணோம். ஒரு மருத்துவர் கடுவன் பூனை கணக்காக எல்லா நோயாளிகளிடம் முகத்தை காட்டிக்கொண்டிருந்தது கடும் எரிச்சலைத் தந்தது. போதாத குறைக்கு அந்த மருத்துவர் ஐயா அவ்வபோது மொபைலில் ஃபேஸ்புக் வேறு செக் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பெண் மருத்துவர் ஒரு பேஷண்டை பார்த்து முடித்ததும், சமயங்களில் பேஷண்டை அட்டென்ட் செய்து கொண்டிருக்குக்கையிலேயும் மொபைலில் யாருடனோ கடலை. மேலும் அந்த அறையில் சிக்னலே  கிடைக்கவில்லையென சலிப்பு வேறு. இன்னொமொரு இளம் மருத்துவர் கொஞ்சம் துடிப்புடன் நோயாளிகளை அட்டென்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால் நாருடன் சேர்ந்து பூவும் நாறிய கதையாக சிறிது நேரத்திலேயே ஃபேஸ்புக் டாக்டர் மற்றும் செல்ஃபோன் டாக்டருடன் அரட்டை ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.


ISO தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவமனையில் சுத்தமென்பது மருந்துக்கும் இல்லை; மாத்திரைக்கும் இல்லை. பொதுவாக நம்மவர்கள் ஆசியாவிலேயே அணைத்து வசதிகளுடனும் கூடிய பெரிய மருத்துவமனை, தெற்காசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம், ஆசியாவிலேயே பெரிய நூலகம் என கட்டிடங்கள் கட்டி முடிப்பதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்களோ எனத் தோன்றுகிறது. அதற்கப்புறமான பராமரிப்பு என்பதை பரணில் ஏறக்கட்டி விடுகிறார்கள். கட்டி முடித்ததும் எல்லாக் கட்டிடங்களுமே சுத்தமாக, பளபளவெனத்தானய்யா இருக்கும்..?அதற்கெதற்கு தரச்சான்றிதழ்.?? இந்த ISO-காரர்களின் கடமை தரச்சான்றிதழ் கொடுப்பதுடன் முடிந்து விடுமா.? அதற்கப்புறம் தரத்தை கண்காணிக்க மாட்டார்களா.? அவ்வாறு இல்லையெனில் கொடுக்கப்பட்ட தரச்சான்றிதழை திரும்ப பெற்றுக் கொள்வார்கலெனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் அதுபோல எதுவும் நடப்பதாக தெரியவில்லை.!!


சரி நல்ல விஷயங்களே இல்லையா.? துரதிஷ்ட்டவசமாக "இல்லை" என்பதே என் பதில். ஒரு பதிவு முழுக்கவே நெகட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு எழுத எனக்கே சற்று சங்கடம்தான். ஆனாலும் வேறு வழியில்லை. ரொம்ப யோசித்துப் பார்த்தல் நோயாளிகள் சொல்வதை கனிவுடன் காது கொடுத்து கேட்ட மூத்த மருத்துவர் ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல். அப்புறம் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, நண்பன் ஒருவனுக்கு ரத்த தானம் செய்ய சென்றிருந்தபோது, அவர்களின் அணுகுமுறையும், அவ்விடத்தின் பராமரிப்பும், அந்த சூழலும் உண்மையிலேயே நன்றாக இருந்தது.அதுவும்  இப்போது என்ன லட்சணத்தில் இருக்கிறதென தெரியவில்லை. 


தமிழகத்தின் பிரதான தலைமை பொது மருத்துவமனையின் லட்சணமே இதுவெனில், கிராமப்புறங்களில் உள்ள மருத்துமனைகளின் தரத்தை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது..

மீண்டும் நோயாளிகளின் மீதான அணுகுமுறைக்கே வருவோம். ஒரு மருத்துவர், நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை வாஞ்சையுடன் காது கொடுத்து கேட்டு, ஆறுதலாக, நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினாலே பாதி நோய் குணமாகி விடுமென கேள்விப்பட்டிருக்கிறேன்; அது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட. ஆனால் அங்கிருந்த இளம் மருத்துவர்கள் நோயாளிகளை பேசவே விடவில்லை; பேச எத்தனித்த ஒரு மூதாட்டியை கடுமையாக எச்சரித்து வாயை அடக்கிய ஃபேஸ்புக் டாக்டரின் செயல்பாடுகள் அராஜகத்தின் உச்சம். ஊக்குகளை விழுங்கி, அது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டு ஆலோசிக்க வந்திருந்த சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்து வந்திருந்த ஒரு தாய்க்கும் இதே அணுகுமுறைதான். ஒரு கணம் ஷங்கர் பட நாயகனாய் மாறி, அவரை வதம் செய்யும் வெறிகூட வந்ததெனக்கு...


அங்கிருந்த பெரும்பாலான மருத்துவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏதோ உலகத்தை ரட்சிக்க வந்த இரட்சகரின் அமர்த்தலான தொனியைக் கொண்டிருந்தது. அதே சமயம்- மருத்துவர்களை கடவுள்களாகக் கருதும் நம் மக்களின் கண்ணோட்டமும் இதற்கொரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது.. நாமும் கொஞ்சம் மாற வேண்டும்.


இனி வரும் காலங்களில்,  மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு முதலில் மருத்துவத்தை சொல்லித்தருவதைக் காட்டிலும் நோயாளிகளை அணுகும் முறை குறித்து சொல்லித்தருவதே சாலச்சிறந்ததாக இருக்குமென கருதுகிறேன்.!!



ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்

Thursday, July 12, 2012

அடையாறு ட்வீட்டப்


ஜூலை 08 2012 அடையாறு – ட்வீட்டப் 



ஒரு நாள் கருப்பையா (@ikaruppiah) என்னை மொபைலில் அழைத்து ஜூலை 08 2012 ஒரு சந்திப்பு @tparavai  - பரணி  @ikrishs – கிருஷ்ணகுமார்  எல்லாம் சந்திக்கிறோம், அன்று என் பிறந்தநாளும்கூட வாங்களேன் என்றார். எனக்கு சற்று தயக்கம்தாம். இவர்கள் இருவரும் சந்தில் எனக்கு அத்தனை பழக்கமில்லாதவர்கள். சரி கருப்புவின் பிறந்தநாள் அப்படியே இவர்களையும் தெரிந்துகொள்ளலாம் என வருகிறேன் என்றேன்.

இடையில் கருப்புவின் லீவு சந்திப்பு இருக்கா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இடையில் திடீரென்று @pizaithiruthi  - கணேஷன் சந்தில் என்னை ட்வீட்டப் பற்றிய ஒரு ட்ரெயினில் ஏற்றியிருந்தார். ஓ அப்போ ட்வீட்டப் இருக்கு என முடிவு செய்து கருப்புவிற்கு போன் செய்தால் ஆமாம் தல என்கிறார். சரி புதியவர்களை சந்திக்கும் ஆர்வம் வழக்கம் போலவே அப்போதே தொற்றிக்கொண்ட்து. ஆதலால் வழக்கமான எங்கள் வீக் எண்ட் CC ட்வீட்டப் வெள்ளியன்று கங்கா ட்வீட்டப்பானது @ravan181 @sesenthilkumar @g4gunaa உடன்.

காட்சி மாறுகிறது. ஜூலை 08 2012 மதியம். கருப்பிற்கு போனில் அழைத்து கன்ஃபர்ம் செய்துகொண்டபின் அடையாறு வந்தடைந்தேன். நான் சீக்கிரம் வரக்கூடாது என நினைத்து கருப்பையா என்னை வேறு இடத்தில் "Rice Bowl Restaurant" இருக்கு என சொல்லி அலையவிட்டு பின்னர் அடையாறு பேருந்து நிறுத்ததிற்கு எதிரில் இருக்கு என சொல்லி வரச்சொன்னார். ஏன் என்னை தாமதப்படுத்தினார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இதற்குள் ஒரு சின்ன ப்ளாஷ்பேக். காலையில் ட்வீட்டப் இருக்கான்னு சந்திற்கு வந்து பார்த்தால், @pizaithiruthi  அதே சந்தேகத்தோடு சந்தில் இருந்தார். எங்கே இருக்கீங்க என கேட்டால் வடபழனி என்கிறார். ஆனால் இன்னமும் பல்லுகூட விளக்கவில்லை ஆகவே பொறுமையாக சந்திக்கலாம் என கூறினார். சரி ட்வீட்டப்பிற்கு வரும்போது சந்திக்கலாம் என நானும் இருந்துவிட்டேன்.

ஒரு வழியாக இடத்தை கண்டுபிடித்து மேலே போனால் அதற்குள் கச்சேரி ஆரம்பித்திருந்தார்கள். அங்கே நான் முன்னமே சந்தித்திருந்த @ikaruppiah  -கருப்பையா, @nforneil -நீலமேகம்,  @_santhu -சந்தோஷ், @puthagappuzhu -வினோத்,  @4sn –செந்தில் நாதன், @isankars –சங்கர் இவர்களுடன் @tparavai  -பரணி @ikrishs -கிருஷ்ணகுமார் @ramkumar_n  -ராம்குமார் இவர்களும் இருந்தார்கள். வந்தவுடன் வழக்கமான அறிமுகத்திற்கு பின் கச்சேரி ஆரம்பித்தது. இதற்கிடையில் பிழைதிருத்தி போன் செய்தார். எங்கே வரனும் தல என்றார். அடையார் பேருந்து நிலையம் எதிரில் என்றேன். இல்லைங்க வடபழனியில் எங்கு வரட்டும். உங்களையும் அழைத்துக் கொண்டு போகிறேன் என்றார். சார் நான் இங்கு வந்துவிட்டேன் என்றேன். ஓ சரி நான் சிறிது நேரத்தில் அங்கு வந்துவிடுகிறேன் என்றார்.

சாப்பாட்டில் என்ன குறை இருக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்கோ அல்லது அடுத்த டேபிளில் யார் உட்கார்ந்து தண்னியடிக்கிறார்கள் என தெரியக்கூடாது என்றோ இது போன்ற ஹோட்டல்களில் வெளிச்சம் மிகவும் மந்தமாகவே இருக்கிறது. இங்கும் அப்படித்தான் டேபிளில் சரக்கு இருந்தாலும் இருட்டில் யார் யார் அதை குடித்தார்கள் என்பது தெரியவில்லை. எல்லோரிடமும் அறிமுகம் செய்து பின் நானும் செட்டில் ஆனேன். திரு.பறவை அவர்களுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். நான் யாரென்றார். சொன்னால், "ஓ..அப்படிங்களா... நான்கூட நீலமேகம்தான் அவருடைய அப்பாவையும் அழைத்து வந்துவிட்டாரோ என் நினைத்தேன்.." என என் வயதை கலாய்க்கிறாராம். சந்தை போலவே டேபிளும் கலை கட்டியது. கிருஷ் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் ஹோட்டலில் மிகவும் அமைதியாகவே இருந்தார். 

அன்றைய நாயகன் கருப்பும் மிகவும் அமைதியாகவே இருந்தார். டேபிளில் காத்திருந்த கேக்கை வெட்டினார். பாசத்துடன் பறவைக்கு அதை ஊட்டிவிட்டார். பாசம் என்று நினைத்து இல்லை அதில் ஏதுமில்லை என உறுதிசெய்துகொள்ளவே முதலில் அவருக்கு ஊட்டி விட்டதாய் பின்னர் தெரிவித்தார். கேக் அபிஷெகம் இரவு அறையில் நடந்து விட்டதால் இங்கு வேண்டாம் என கருப்பு கேட்டுக்கொண்டார். வினோத், நீலமேகம், சங்கர் போன்றோரும்  சாப்பிட கேக் இருக்காது என்பதால் அபிஷேகம் வேண்டாமென முடிவு செய்தனர். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல்கள் மெல்ல அவரவர் ட்வீட்டும் ஸ்டைல் பற்றி மாறி பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பியது. புத்தகப்புழு சமீபத்தில் பிரபலமாக்கிய மாலதி டீச்சர் பற்றி எங்கள் டேபிள் மட்டுமல்ல அந்த ரெஸ்டாரண்டே அதிர விவாதம் நடந்தது. MIT முன்னாள் மாணவர்களான பறவையும் புத்தகப்புழுவும் மாலதி டீச்சரைவிட்டு வேறு யாரோ சிலரை பற்றியும் இந்த இலக்கிய விவாதத்தின் போது பேசிக் கொண்டார்கள். அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். விவரம் வேண்டுபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளவும். இதில் நடுவே பறவையை “உனக்கு இவ்வளவு கேவலமான டேஸ்டாய்யா. உன்கூட சேரவே கூடாதுஎன புத்தகப்புழு கூறியது மட்டும் காதில் விழுந்தது. வழக்கமான சந்தை போலவே நிறைய பாறைகளும் கவுண்டர்களும் சரமாரியாக விழுந்தன. குறிப்பு எடுக்க முடியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு நினைவில் இருப்பவை அதையெல்லாம் விரைவில் ட்வீட்டுகளாக வெளியிடுவார்கள் என நம்புவோமாக. இதில் பறவையும் கிருஷ்ணகுமாரும் பேசுவதே ட்வீட்டுவது போல நக்கலும் நையாண்டியுமாக்த்தான் இருக்கும் போல. “பேசுவதைத்தானே கீச்சுகிறேன்என பறவை சொன்னதும் இது பல RT பெற வல்ல கீச்சு என அங்கிருந்த அனைவ்ரும் அதை RT செய்தோம். 


 இடமிருந்து வலமாக- @ikaruppiah @NforNeil @4SN @Pizhithiruthi @iSankarS @Senthilchn @Tparavai @puthagappuzhu @iKrishS @ramkumar_n குத்தவைத்து ஒக்காந்திருப்பவர் @vilambaram

இதற்கிடையே @vilambaram – சக்திவேல்  அழைத்தார். இடம் சொன்னார் கருப்பையா. வந்து சேர்ந்தார். இவருக்கு அப்படி என்னதான் என்மேல் பாசம்னு தெரியலை. என்னை அடிக்கடி நெகிழ வைத்துவிடுவார் அந்த வெள்ளை சிரிப்பால்.

சாப்பிட என்ன சொல்லியிருக்கீங்க என்றால், 5 சிக்கன் பிரியாணி என்றார்கள். சரி மேலும் இரண்டு ஆர்டர் செய்யுங்கள் என்றால். இல்லைங்க அவ்வளவுதான் இருக்கு என்றார்கள். சைனீஸ் ரெஸ்டாரண்டில் வந்து பிரியாணி சொன்னால் அப்படித்தான். அவர்கள் லிமிடெடாதான் செய்வார்கள் போலும். சரியென இருப்பதை பகிர்ந்து சாப்பிட்டோம். சரக்கு அடிக்கப்பட்ட்து. நடுநடுவே கீச்சுகள் பல உதிர்க்கப்பட்டன. எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் கபாப் சொன்னேனே எங்கே காணவில்லை என தேடிக் கொண்டிருந்தார் சந்திப்பின் இணை நாயகன் திரு.பறவை. அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது சந்திப்பின் மற்றுமொரு விசேஷம். பேசிக்கொண்டிருக்கையில் பிழைதிருத்தி வந்தார். ஆனால் அவர் வரும்போது கிட்டத்தட்ட எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தோம். அவருக்கு மிஞ்சியது கேக் துண்டுதான். அதைகூட சாப்பிட்டாரா இல்லையா என தெரியவில்லை. அவருடைய சினிமா இலவச மேகசின் பற்றி கூறினார். அந்த ப்ராஜக்ட் விஷயமாகத்தான் சென்னை வந்திருப்பதாக கூறினார். 

 4sn அமைதியாய் இருந்ததை பார்த்து இது செந்தில்தானா இல்லை அவரை போலவே இருக்கும் வேற ட்வீப்பா என சில நிமிடங்கள் யோசித்தேன்.
 பறவையும் மற்றவர்களும் கிரிஷ்ணகுமாரை பற்றி பேசுகையில் ஏதோ ஹமாம் ட்வீட் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல எனது மறதியால் எனக்கு என்னவென்று நினைவில் இல்லை. அவரவரின் அல்லது மற்றவர்களின் ட்வீட்டுகளை பற்றி பேசிக்கொண்டார்கள். என்னுடைய ட்வீட்டுகள பற்றி ஏதும் பேசப்படவில்லை என்பதில் சிறு ஏமாற்றம் இருந்தாலும் மகிழ்ச்சியும்தான். ராம்குமார் மட்டும் எனது கடலை மிட்டாய் ட்வீட்டை பார்த்துதான் என்னை பாலோ செய்ததாய் கூறியது சற்று ஆறுதலான விஷயம்.

மணி 3.00 எட்டியது. அந்த ரெஸ்டாரண்ட் 3.00 மணிக்கு மூடிவிடுவார்களாம். பில்லோடு வந்துவிட்டார் சர்வர். சரியென இடத்தை காலி செய்தோம். குரூப் போட்டோ எடுத்துகொண்டு கீழே வந்து அரட்டை ஆரம்பம். என்ன பேசினோம் என தெரியவில்லை. பறவையும் விளம்பரமும் கருப்பையாவின் பட்த்தை வரைந்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்கள். சந்துக்கு ஏதோ அவசர வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட்டார்.


 கருப்புவை வரைந்து கருப்புவுக்கே  பரிசளிக்கும் விளம்பரமும், பறவையும்..

12 பேரில் மீதமிருந்த 11 பேரும் கருப்பையாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு சென்றும் வழக்கமான அரட்டைதான். கருப்பையாவின் வீடு அடையாறில் அமைதியான ஒரு சூழலில் இருக்கிறது. அவரது வீட்டிற்கு முன்னால் இருந்த ஒரு திண்ணையை பிழைதிருத்தி படமெடுத்தார். கேட்டால் இங்குதான் கருப்பு உட்கார்ந்து கவிதை எழுதியதாக வரலாறு கூறும் என்றார். எங்கள் எல்லோருக்கும் ஒரு சந்தேகம். கருப்பையாவின் வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் வீடு போலவே இல்லை. எங்களுக்கு எல்லாம் தெரியக்கூடாது என்பதால் திருமணம் ஆன விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்கள் பலருக்கு. நல்லா இருந்தா சரிதான்.

4sn  குஷ்பூவுடன் போட்ட சண்டை பற்றி கொஞ்சம் பேச்சு ஓடியது. பிறகு பறவை தான் இளையராசாவுக்காக எதுவும் செய்வேன் என்றார். நல்லவேளையாக யாரும் ரகுமான் ராசா சண்டையை அங்கு ஆரம்பிக்கவில்லை. இப்படியாக பேச்சு நீண்டுகொண்டே இருந்தது. காலையில் தவறவிட்ட திருமணத்தின் ரிசப்ஷன் 6.30மணிக்கு இருந்தது என் நினைவிற்கு வந்ததால் கிளம்பலாமா என நான் ஆரம்பித்தேன். சரியென எழுந்து வெளிவந்த பின் கருப்பையாவின் வீட்டைவிட்டு கிளம்ப அதற்கு பிறகு 30 நிமிடமாகியது தனிக்கதை.

Nforneil நாள் முழுதும் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படி மாறிவிட்டார் என தெரியவில்லை. அங்கு பேசியதையெல்லாம் வைத்துக்கொண்டு சங்கர் சந்தில் என்ன புது பிரச்சனைகளை கிளப்ப போகிறார் என தெரியவில்லை.

g4gunaa – குணா யாரோ அவரது பள்ளி நண்பர்களை பார்க்க என்று சென்றவர் கடைசி வரையில் வரவேயில்லை. எனக்கு நம்பிக்கையேயில்லை. வேற யாரோ சென்னைக்கு வந்திருக்க வேண்டும் என்பது என் யூகம். 

@nchozhan இவரும் வருவதாய் கூறியிருந்தார். அவருக்கு ட்வீட்டப் நடக்கும் இடத்தையும் நேரத்தையும் சொல்ல மறந்துவிட்ட்தால் அவரையும் தவறவிட்டுவிட்டோம்.

ஆக இப்படியாக இந்த ட்வீட்டப் இனிதே முடிந்தது. 

அன்புடன்,
செந்தில் நாதன் @Senthilchn

Monday, June 25, 2012

நிச்சயத்துக்கும், திருமணத்துக்கும் இடையே...


விரைவில் திருமணம் ஆகவிருக்கும் பேச்சிலர்களுக்கு அறிவுரையாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்தலாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி.

இன்றைய மொபைல் மற்றும் இணைய உலகில் திருமணம் நிச்சயக்கப்பட்ட அல்லது அதற்கு முன்பிருந்தேகூட உட்பீ என அழைக்கப்படும் மணப்பெண்ணிடம் கடலை வறுக்க ஆரம்பித்துவிடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இன்னமும் இங்கு பெண்களுடன் பழகுவது ஆச்சர்யமாகவும், வரமாகவும், கிடைத்தற்கரிய ஒன்றாகவும் இருப்பதால் ஏதோ ஒரு லைசன்ஸ் கிடைத்துவிட்டது போலவே நினைத்து அவரப்படுகிறார்கள். நாசூக்காக அணுகாமல் உழுது புரண்டு அவசரப்படுவது அசிங்கமாய் வெளியே தெரிவதைப் பற்றியெல்லாம்கூட கவலை படாமல் கடலைகள் வறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படியெல்லாம் செய்துவிட்டு திருமணத்திற்கு பின் அந்த மோகம் முடிந்த பின் அப்பெண்ணின் மனதில் தொடரும் ஏக்கங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தி விடுகிறார்கள்.!
சரி விஷயத்திற்கு வருகிறேன்.

திருமணம் நிச்சயமான ஆண்கள் என்னவெல்லாம் செய்யலாம். முக்கியமாக என்னவெல்லாம் செய்யக் கூடாது. இது இறுதியான விதியல்ல. பல விஷயங்களை கருத்தில் கொண்டு மாறலாம். பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல...

*எடுத்த உடனேயே அதிகம் பேசாதீர்கள். எடுத்த உடன் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிடாதீர்கள். மொபைலில் அழைத்து பேசுவதாய் இருந்தாலும் சரி அல்லது நேரில் சென்று பார்ப்பதாய் இருந்தாலும் சரி தொடர்ந்து நீங்களே ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்காதீங்க. இருமுறை நீங்கள் அழைத்தால் ஒருமுறை அவர் அழைக்கும் வரை பொறுத்திருங்கள். எப்போது பார்த்தாலும் அவரே அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.

*எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்ற பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். பேசுவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அவசர விஷயமாக இருந்தால் இடையில் அழைக்கட்டும். வழக்கமான கடலைகளுக்கு அலுவலக நேரங்களை தவிர்த்திடுங்கள். நாளை திருமணத்திற்கு பின் எதேச்சையாக அலுவலக நேரத்தில் நீங்கள் அவரது ஃபோன்காலை தவிர்க்க நேர்ந்தால் அது பிரச்சனையாகும். ஆகவே ஆரம்பம் முதலே அலுவலக நேரத்தில் போன் கால்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும்.

*உங்களை பற்றி சொல்லும் முன்னர் முதலில் பெண்ணை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். அவரது சமூகசூழலை நன்கு அறிந்து அந்த அளவிற்கு உங்களை வைத்து பேசுங்கள்.வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மாடர்ன் தாட்ஸ் இருப்பது போல காட்டிக் கொள்ள உங்களின் அலப்பறைகளை அவிழ்த்து விடாதீர்கள். உதாரணத்திற்கு, "நான் இன்னிக்கி ஃப்ரெண்ட்ஸொட சேர்ந்து தண்ணியடிச்சேன்.." , "என் கேர்ள் ஃப்ரெண்டுடன் சினிமாவிற்கு போனேன்..." என்பன போன்ற விஷயங்கள் திருமணத்திற்கு பின்னரோ ஏன் சில சமயங்களில் திருமணத்திற்கு முன்னரேகூட தன் சனீஸ்வர வேலைகளை காண்பிக்க ஆரம்பிக்கும். எதையெல்லாம் பேச வேண்டும். எந்த அளவு பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

*உங்கள் எதிர்கால மனைவியின் உறவினர்கள் தோழிகள் பற்றி கமெண்டுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. ஹாஸ்யம் என நினைத்து அவரது அப்பா, அம்மா, தம்பி, தங்கை பற்றி நீங்கள் இப்போது செய்யும் விமர்சனங்கள், முக்கியமாக அவர்களது உருவம் பற்றி செய்யும் கிண்டல்கள் பின்நாட்களில் வானவேடிக்கைகளாக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. உங்களின் எதிர்கால மனைவி எத்தனைதான் ஓபன் டைப்பாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் அவரது அழகை யாருடனும் ஒப்பிடாதீர்கள். முக்கியமாக அவரது தோழிகள், உங்களது தோழிகள், உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் ஒப்பிடாதீர்கள். பிற பெண்களின் குணங்களை பற்றி உயர்த்தி அடிக்கடி அவரிடம் பேசாதீர்கள்.

*மிக முக்கியமான் விஷயம். உங்கள் நண்பர்களை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அப்படியே பேசித்தான் ஆகவேண்டுமெனில் நல்ல விஷயங்களை பற்றி மட்டும் சொல்லுங்கள். உண்மையாக இருக்கிறேன் என நண்பர்களை பற்றிய உண்மைகளையெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் அவர் உங்கள் மனைவியான பின்னர் உங்கள் நண்பர்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

*இது மட்டுமில்லாமல் அதிக செலவாளி என பெயர் வாங்கிவிடாதீர்கள். உங்களை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல் உண்மை நிலவரங்களை ஓரளவு இலைமறை காயாகவாவது தெரிவியுங்கள். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி தவறாகவோ அவர்கள்மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்புகளையும் கண்டிப்பாக கூறாதீர்கள். உங்களுடைய அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் உடனேயே ஒப்புவிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

*மெதுவாக, நிதானமாக ஒரு புரிதலை ஆரம்பியுங்கள். செக்ஸ் பற்றியெல்லாம் பேசவும் அனுபவிக்கவும் நிறைய காலம் இருக்கு திருமணத்திற்கு பின்னர். ஏற்கெனவே முடிவு செய்த விஷயமென்றாலும் அதில் மெல்ல மெல்ல காதல் பூக்கச்செய்ய கிடைத்த கால அவகாசம்தான் நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி.

*மொபல் போன் இல்லாத காலகட்டத்தில் என் நண்பர் ஒருவர் STD பூத்தில் அக்கவுண்ட் வைத்து மாச சம்பளம் வந்ததும் 3000-4000 வரை செட்டில் செய்தார் அந்த நான்கு மாதமும்.

*அழைக்கும் போதெல்லாம் பேசிவிட்டு இப்போது வேலை இருக்கு அப்புறம் அழைக்கிறேன் என சொல்லும் நாளெல்லாம் வாங்கி கட்டிக்கொள்கிறேன் நான்.

*அவன் நல்லவனாக, ஹீரோவாக மாற எங்களை பற்றிய குறைகளை விளையாட்டாய் சொல்லி, திருமணத்திற்கு பின் ஏதேனும் உதவி என்றால்கூட எங்களை அழைக்க முடியாமல் தனியாகிவிட்ட நண்பன் ஒருவனும் இருக்கிறான்.

இப்படியாக பல இருக்கிறது. இது ஒரு டெஸ்டிங் பீரியட். இதை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும்.

இனிய திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பர்களே....

அன்புடன்,
செந்தில் நாதன் @senthilchn

Saturday, June 23, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -3)

மிரட்டல் அடி பார்ட் ஒன்னு, ரெண்டெல்லாம் முடிஞ்சி மூனாவதா வாத்திமார்கள் கதை..
 

இதுல என்னோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, பொதுவா ஒரு பள்ளிக்கூடத்துல ரொம்பவே சாதுப்பிராணிகளா சில வாத்தியார்கள் இருப்பாங்க இல்லையா.. அவங்களையே ஸ்கூல் கொள்ளாத அளவுக்கு மிரள வைத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்னோட ஸ்டைல்.

வாத்திமார் கதை-1:


இது நான் ஏழாப்பு படிச்சிட்டு இருந்தப்போ நடந்த, நீதிபோதனை + வரலாறு வாத்தியார்கிட்ட வாங்குனதப் பத்தின வரலாற்று நிகழ்வு.
இவரப்பத்தி சொல்லனும்ன்னா, ஒரு கொசு அவரக் கடிச்சாக்கூட அத அடிக்காம தொரத்திதான் விடுவாரு.. அந்தளவுக்கு ஜீவகாருண்யரு..
அந்தநாள்..அதுவொரு அடித்து விளையாடுவதற்கு மிகவும் சாதகமான கிளியர் சன்னி டே..அந்தநாளின் கடைசி பீரியட் அது.

நம்ம சார் திபெத் பீடபூமியைப் பத்தி ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டுருந்தார் சொற்பொழிவ.. பாடத்தோட பாடமா "திபெத் பீடபூமிதான் உலகத்துலேயே பெரிய பீடபூமி.." அப்படின்னு ஒரு பொது அறிவுத்தகவலை அவரு சொல்லவும் "சார்..திபெத் பீடபூமி எங்க சார் இருக்கு..?" அப்படின்னு கூட்டத்திலிருந்து ஒரு இனிமையான கானக்குரல்..
ஆமாங்க.. யூ ஆர் அப்சலூட்லி கரெக்ட்..என்னோட குரல்தான்..
நான் என்னமோ தெரிஞ்சுக்கனுங்கற ஆர்வத்துலதான் கேட்டேன்..
ஆனா நான் கேட்ட டோன் பசங்களுக்கு எப்படி இருந்துச்சோ தெரியல..
ஹோல் கிளாசும் ஹோல்சேலா சிரிச்சுடுச்சி..

அதப்பாத்துட்டு அம்பி வாத்திக்குள்ள இருந்த அந்நியன் முழிச்சிக்கிட்டான்.. நம்மாளு என்னை தொவதொவன்னு தொவச்சி, காய வெச்சி, அயர்ன் பண்ற அளவுக்கெல்லாம் போயிட்டார்..
நல்லவேள, அந்த நேரம் பாத்து எவனோ ஒரு புண்ணியவான் கடைசி பெல்-ல அடிச்சான்..இல்லேன்னா, அன்னிக்கே அவரு என் வாழ்க்கைக்கு கடைசி பெல் அடிச்சிருப்பாரு..

இந்த கும்பிபாக கும்பாபிஷேகம் முடிஞ்சதும் பசங்ககிட்டே "எதுக்குடா அப்படி சிரிச்சீங்க.?"-ன்னு கேட்டா, "பின்ன.. நீயெல்லாம் டவுட்டு கேட்டா சிரிக்காம என்ன செய்யறதாம்.?"-ன்னு சிரிக்காம காமெடி பண்ணுனானுங்க.. சரி விட்ரா..விட்ரா சூனா பானா.. நீ சந்தேகம் கேட்டு, பிற்காலத்துல கலெக்ட்டரா வர்றது எவனுக்கும் புடிக்கலை போல'ன்னு எனக்கு நானே தாறுமாறா ஆறுதல் சொல்லிக்கிட்டு, புண்பட நெஞ்சை பண்படுத்தும் விதமா செட்டுக்காரண்ணன் கடைல நாலு தட்டுவடை செட்டு வாங்கி சாப்ட்டுக்கிட்டே வீட்டுக்கு போயிட்டேன்..



வாத்திமார் கதை-2:
நான் எட்டாவது படிச்சிட்டு இருந்தப்போ நடந்த வைபவம் இது..
இந்தமுறை கதையின் நாயகன் எங்க தமிழாசிரியர் பரமேஸ்வரன் ஐயா..
எல்லாப் பசங்களுக்கும் பிடித்த ஆசிரியர்..எனக்கும்..ரொம்ப..
மிக அருமையாக,நகைச்சுவை கலந்து தமிழ் சொல்லித்தருவார்.
மற்ற பாடவேளைகள் எப்படா முடியும் என நினைக்கும் நாங்கள், இவர் பாடவேளை மட்டும் எப்படா வரும் என காத்திருப்போம்..
அந்த காலத்திலேயே பொதிகை தொலைக்கட்சியில் பட்டிமன்றமெல்லாம் பேசியிருக்கிறார்.
இன்று வரைக்கும் நான் மதிக்கும் ஆசிரியர்களில் முதன்மையானவர்.
ஆனா..
நம்மோட ஜெகத்தலபிரதாபத்தை பார்த்து அசந்துபோய் இவரும் நமக்கு பரிசில் வழங்கியிருக்கிறார்.

இனி, over to சம்பவம்.

அது ஒரு காலாண்டுத்தேர்வோ..இல்ல..அரையாண்டுத்தேர்வோ நடந்துட்டு இருந்த சமயம்.எங்க ஸ்கூல்-ல எப்படின்னா, முழு பரீட்சை தவிர மற்ற தேர்வுகளுக்கு, ஒரு நீள டெஸ்க்கில் மூன்று பேர் வீதம் அமர வைத்து தேர்வு நடக்கும். அதாவது டெஸ்கின் இரண்டு பக்கமும் ஒரே வகுப்பை சேர்ந்த மாணவர்கள்.நடுவில் வேறு ஒரு வகுப்பை சேர்ந்த மாணவன்.

சம்பவதன்னிக்கு, எனக்கு இரண்டு பக்கமும் +2 படிக்கும் அண்ணன்கள்.
நடுவில் நான். ஹால் சூப்பெர்வைசர் நம்ம கதை நாயகன்.
+2 பசங்க ரெண்டு பேரும் அவங்க கொஸ்டின் பேப்பேர்ல ஒன் வோர்ட் ஆன்சரெல்லாம் டிக் பண்ணி நடுவுல இருந்த என் மூலமா பாஸ் செஞ்சிட்டு இருந்தாங்க. எங்க ஸ்கூல்-ல இது மாதிரி வழக்கமா நடக்கறது தான்..
சின்ன கிளாஸ் படிக்கற பசங்க பெரிய கிளாஸ் அண்ணன்களுக்கு பயந்துட்டு இதை செய்வாங்க. நான் அப்போல்லாம் கொஞ்சம் பயந்த சுபாவன்.(இப்போ எப்படினெல்லாம் கேக்க கூடாது...)

மேலும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுங்கற நல்லெண்ணெய் ச்சை.. நல்லெண்ணம் அந்த சின்ன வயசுலேயே எனக்கு மேலோங்கி இருந்ததால அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலான சிறு உதவியை செஞ்சிட்டு இருந்தேன். அதுல பாருங்க.. என்னோட இந்த உதவி செய்யற குணம் நம்ம கதாநாயகனுக்குப் புடிக்கலை போல..
இதை நோட் பண்ணிட்டு என்கிட்ட வந்த அவர்,
டெஸ்குல இருந்து என்னை வெளியே இழுத்து மொதல்ல கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம் கொஞ்ச நேரம் முடியை புடிச்சு ஆட்டினார்.
அப்புறம் குனிய வைத்து முதுகுல ரெண்டு சாத்து சாத்தினார்.
அப்புறம் நிமிர வைத்து திரும்பவும் கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம்..
---
---
---
சரி விடுங்க.. என் சோகம் என்னோட போகட்டும்...

ஒரு பத்து நிமிஷம் ஆக்ஷன் பிளாக்குக்கு ஒதுக்கிட்டு அடுத்த காட்சிக்குப் போவோம்.அடுத்த காட்சி என்னன்னா, நம்மாளு இன்னும் கோபம் அடங்காம, "வெளிய போய் நின்னுட்டே எழுதுடா..அப்போதான் உனக்கு புத்தி வரும்.." அப்படின்னு வெளியே அனுப்பிட்டார்.
நானும் "இனிமே வீட்டுப்பாடம், பால் கணக்கு, லவ் லெட்டர் இப்படி எதா இருந்தாலும் வீட்டுக்கு வெளியே தான் நின்னு எழுதணும்..அப்போதான் நெறையா புத்தி வரும்..." -ன்னு மனசுல நெனைச்சிட்டே வெளியே போய் நின்னுட்டு எழுதறேன்..
புத்தியும் வரல..புண்ணாக்கும் வரல..
எழுத்துதான் கோணல் கோணலா வந்தது...

அதுக்கு அடுத்து வந்தது செண்டிமெண்ட் பிளாக்.
நான் பாவமா நின்னுட்டே எழுதறத பார்த்த நம்ம கதாநாயகன், என் பக்கத்துல வந்து, என்னோட கலைஞ்ச தலையெல்லாம் சரியா ஒதுக்கி விட்டுட்டு "இனிமே இப்படியெல்லாம் பண்ணக்கூடாது..சரியா..?"அப்படின்னு சொல்லி உள்ள போய் உக்கார்ந்து எழுத சொல்லிட்டார்.
குற்றம் செஞ்ச என்னை விட, குற்றம் செய்ய தூண்டுன அந்த +2 பசங்களை அவர் ஒண்ணுமே சொல்லலைன்னு ஒரு சிறு வருத்தம் இருந்தாலும், நான் மதிக்கும் அவரிடம் கெட்டபேர் வாங்கினது இன்னிக்கு வரைக்கும் என்னோட மனசை உறுத்திட்டே இருக்கற ஒரு விஷயம். 

இதன் கடைசி பாகமான வாத்திமார் கதை-3 இன்னும் சில தினங்களில்...

முந்தைய பாகங்கள்:
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


 தொடரும்...



 

Wednesday, June 20, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)

முதல் பாகத்துல அம்மாக்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டதை படிச்சி சந்தோஷமா இருந்திருப்பீங்க.. அடுத்து அப்பா.  எதுக்குமே கோவப்பட மாட்டார்; பெரிசா அலட்டிக்க மாட்டார்.. கிட்டத்தட்ட என் காரக்டரும் அதான். நான் கொயந்தயா இருக்கறச்சே.. வுட்வர்ஸ் க்ரைப் வாட்டர்..ச்சை. பழக்க தோஷம்.. நான் கொயந்தயா இருக்கறச்சே ஒருநாள் எங்கப்பா என்னை கொஞ்சுறேன் பேர்வழி'ன்னு எக்குத்தப்பா தூக்கினதுல என் ஒரு கைய்யே ஒடஞ்சு போச்சாம்.. அந்தளவுக்கு டெர்ரரான பாசக்காரரு.. ஆனா, அவர்கிட்டையும் தொரத்தி தொரத்தி அடி வாங்கியிருக்கேன்னா, என்னோட புஜபல பராக்கிரமத்தை நீங்க புரிஞ்சிக்கணும்..   எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு முறைதான் இவர்ட்ட அடி வாங்கிருக்கேன்..ஆனா ரெண்டு சம்பவத்தின்போதும் சும்மா பின்னு பின்னுன்னு பின்னி, ஜடை போட்டு, பூ,பொட்டெல்லாம் வெக்கற ரேஞ்சுக்கு போய்ட்டார்...




கொசுவத்திசுருள்-1:


அப்போ நான் எட்டாவதும், என் தம்பி ஆறாவதும் படிசிட்டுருந்தோம்..
ஒருநாள் நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுப்பக்கத்துல இருந்த ஒரு பேர் தெரியாத மரத்துமேல (அது ஒரு நன்றிமறந்த கருங்காலி மரம்'ன்னு அப்புறமாதான் தெரிய வந்திச்சி) ஏறி ஒக்காந்துகிட்டு, அவங்கவங்க கிளாஸ்-ல யாரெல்லாம் சூப்பர் பிகர்..யாரெல்லாம் மொக்கை பிகர்-ன்னு ரொம்ப தீவிரமா ஃபிகராயணம் பத்தி டிஸ்கஸ் செய்துட்டு இருந்தோம்..
அப்போ அந்த பக்கமா வந்த எங்கப்பா,எங்களோட "அழகு"ப்பேச்சுவார்த்தையை முழுசும் ஒட்டுக் கேட்டுட்டார் போல..
மரத்துலேர்ந்து எறங்கச்சொல்லி மொதல்ல எனக்கு விட்டார் பாருங்க ஒருஅறை.. ஆககா..என்னா அடி.???
காதுல ச்சும்மா ங்ங்கொய்ய்ய்யுன்னு மணியடிக்குது..
கண்ணுல ச்சும்மா ஞ்ஞ்ஜொய்ய்யுன்னு பூச்சி பறக்குது..
 நாட்டாமை கவுண்டர் கணக்கா என் காதுக்குள்ள குருவி கத்துற சவுண்டெல்லாம் கேக்குது..
  அத்தோட விட்டாரா..? "மொளச்சி மூணு எலை விடல.. அதுக்குள்ளே பெரியமனுசத்தனம் வந்துருச்சா ஒங்களுக்கு.?" -அப்படின்னு சொல்லிக்கிட்டே, நாங்க உக்காந்திருந்த மரத்துலேர்ந்தே ஒரு குச்சிய ஒடச்சு (தட்ஸ் வொய் ஐ கால்டு தட் மரம் யேஸ் கருங்காலி மரம்..அவ்வ்வ்வ்.. :-/ ) அடிக்க ஆரம்பிச்சவர்தான்..
அந்த இடத்துலருந்து எங்க வீடு வரைக்கும் சுமார் ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நாங்க ஓட..அவர் துரத்த.. அவர் துரத்த..நாங்க ஓட..நாங்க ஓட..அவர் துரத்த..... -இந்த மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபித்து முடிப்பதற்குள் ஒருவழியா வீடு வந்துடுச்சி..ஹப்பாடா..

இந்த ரணகளத்துளேயும் ஒரு கிளுகிளுப்பு என்னன்னா, எங்கள அவரு தொரத்தி தொரத்தி அடிச்சத பாத்த எங்க தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோரும் "ஏம்பா இந்த பச்சமண்ணுங்கள(!) போட்டு இந்த அடி அடிக்குற"ன்னு கேட்டும் அவரு ஒன்னும் சொல்லாம, எங்க இமேஜ் மேற்கொண்டு டேமேஜ் ஆகாம காப்பாத்திட்டார்.
எங்கம்மாட்ட கூட அடுத்தநாள் தான் சொன்னாரு.. ஸ்வீட் டாடி.. 
 




கொசுவத்திசுருள்-2:
ஒருநாள் சாயங்காலம் எங்கம்மா, சமையலுக்கு எண்ணெய் வாங்கிட்டுவர என்னையும், எங்க அண்ணனையும்(பெரியப்பா பையன்) பக்கத்துல இருக்க கடைக்கு அனுப்புனாங்க..
அந்த கடை எங்க வீட்டுலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும்.. அப்போல்லாம் எங்க வீட்டுல டி.வி இல்ல..
கடைக்கு போயிட்டு வர்ற வழியில, ஒரு வீட்டுல டி.வி.யும் வெச்சு, அதுல கேபிள் கனெக்சனும் கொடுத்து, அதை பொதுஜனங்கள் பார்வைக்கும் திறந்து விட்டுருந்தாங்க..
என்ன இருந்தாலும் நாங்களும் இரு பொதுஜனம்'ங்கற முறையில ரெண்டு பேரும் அந்த விழாவ இருந்து சிறப்பிக்க அங்க போய்ட்டோம்...
அதுல ஏதோ ஒரு சுவாரசியமான மொக்க நிகழ்ச்சி போய்டிருந்தது..
அதையே நாங்க உள்ள இருக்க குடலு, குந்தாணியெல்லாம் தெரியற அளவுக்கு வாயை பொளந்துட்டு  பாத்துட்டுருந்ததால டைம் போனதே தெரியல..
திடீர்னு எனக்கு வீட்டப்பத்தின ஞானோதயம் வந்து அவன கூப்பிட ஆரம்பிச்சேன்.. ஆனா அவன் டி.வி கடல்ல ஓவரா மூழ்கி முத்தெடுக்கவே ஆரம்பிச்சுட்டான் கடப்பார நீச்சல்கூட தெரியாத அந்த கடங்கார பயபுள்ள..
இதுல "நீ வேணும்னா போ..நா அப்புறமா வர்றேன்" அப்படின்னு தெனாவெட்டா வேற சொல்றான்.. நா சுத்தீலும் பாக்கறேன்.. இருட்டுவேற கட்டிடுச்சு.. எனக்கு தனியா போகவும் பயம்.. அவன கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு போறதுக்குள்ள ஜஸ்ட் ஒரு மூனே மூணு மணிநேரம் லேட்டாயிடுச்சி.. வீட்ட நெருங்க நெருங்க அம்மாட்ட இன்னைக்கு நெறைஞ்ச மண்டலபூஜை உண்டுங்கற பயத்துல எனக்கு கண்கள் பனிக்கவும், இதயம் தாறுமாறா துடிக்கவும் ஆரம்பிச்சுடுச்சி...
ஆனா, வீட்டு வாசல்ல பாத்தா..
---
---
---
---
---

அங்கதான் திரைக்கதைலயே ஒரு ட்விஸ்ட்..
எங்கப்பா ஒரு பெரிய குச்சியோட வாசல்லையே நிக்கறார் எங்கள வரவேற்க..
"ஏன்டா.. இங்க இருக்க பாய் கடைக்கு போயிடு வரை இவ்ளோ நேரமா..?" அப்படின்னு அவர் கேக்க, நானும் அம்மாட்ட இருந்து தப்பிச்ச குதூகலத்தோட "சைக்கிள் பஞ்சர் ஆகிடிச்சுப்பா.." -ன்னு ஒரு மொக்க ரீசன் சொன்னேன் பாருங்க..
அடுத்த அரைமணி நேரத்துக்கு அங்க ஒரு அற்புதமான அடிமழை..
சும்மா அடைமழை மாதிரி பொழிஞ்சு தள்ளிட்டார்..
குச்சி ஓடிஞ்சும் கூட அவர் விடலியே.. இதுல கிளைமாக்ஸ் திருப்பமாக வேற குச்சியை அவர் தேட போனப்போ.."என்னது மறுபடியும் மொதல்லேர்ந்தா..?" அப்படின்னு எங்கம்மாவே ஜெர்க் ஆகி, அவங்களே எங்களுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுடாங்கன்னா பாத்துக்கோங்க..

பி.கு.: மேற்படி சம்பவத்த பத்தி ரொம்பநாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு..
அது என்னன்னா.. எங்கப்பா ஒரு அரைமணி நேரத்துக்கு சாத்து சாத்துன்னு சாத்தியும் இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் எங்க போயிருந்திங்கன்னு ஒண்ணுமே கேக்கல.. ஆனா பிளாஷ்-பேக்குல என்ன நடந்ததுன்னு எனக்கு அப்புறமா தான் தெரியவந்தது..
டீ.வி. பாக்குற இடத்துல பொதுஜனத்தோட பொதுஜனமா எங்களோட நலம்விரும்பி ஒருத்தரும் அங்க இருந்திருப்பார் போல.. அவரு டீ.வி. பாத்து முடிச்சிட்டு வீட்டுக்கு போற வழியில, ஏதோ நல்லெண்ண தூதுவர் ரேஞ்சுக்கு அவரப்பத்தி அவரே கற்பனை பண்ணிக்கிட்டு, மெனக்கெட்டு எங்க வீட்டுக்குப்போய் மேற்படி விஷயத்த ரொம்ப சீரும் சிறப்புமா கொளுத்திப் போட்டுட்டு போய்ட்டாரு.. அதுக்கப்புறம்தான் எங்கப்பா எங்க கொளுத்திட்டார்...

மாதா, பிதா முடிஞ்சி குரு-வுக்கு போறதுக்கு முந்தி இடைச்செருகலா
என் உடன்பிறப்பு..


தம்பி- பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்-ன்னு சொல்லுவாங்க.. இவன பொருத்த வரைக்கும் தம்பியுடையான் அடிக்கு அஞ்சான்-ன்னு சொல்லலாம்..
அந்தளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் எக்கச்சக்க கொடுக்கல்-வாங்கல்  நடந்துருக்கு..
ஆனா..இவன்கிட்ட சண்டை போடுறது தெருவுல போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுறதுக்கு சமம்..
ரெண்டுபேருக்கும் சண்டை வரும்போது என்கிட்டே எந்தளவுக்கு வாங்குறனோ அதுக்கு சரிக்குசமமா திருப்பிக் கொடுத்ததோட மட்டுமில்லாம , வீட்ல அம்மாட்ட போய் அவனோட ஆக்ஷன் பிளாக்-க்க மட்டும் சென்சார் பண்ணிட்டு, என்னோட புஜபல பராக்கிரமங்களை  மட்டும் DTS எபக்டோட, எடிட்டிங் எல்லாம் பண்ணி பக்காவா பத்த வெச்சுடுவான் பாசக்கார பய..
அப்புறமென்ன... அடுத்து வருவது நெக்ஸ்ட்டு ரவுண்டு டண்.டணா..டண்..



அடுத்தடுத்த பாகங்களில் வாத்திமார்கள் கதை..

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் ஒரு எட்டு இதையும் படிச்சிட்டு வந்துருங்க:  அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))



தொடரும்...



Monday, June 18, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)

முஸ்கி: இது ஆர்குட்'ல "தமிழ் குடும்பம்" குழுமத்துல அடிவாங்குறதை பத்தின பேச்சு வந்தப்போ அங்க ஒரு இழைல நான் எழுதின அடி'களார் புராணம்.. மாதா, பிதா, குரு இவங்ககிட்டல்லாம் வாங்கிக்கட்டின அனுபவத்தை வரிசையா எழுதினேன்.. அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உங்களின் பார்வைக்காக இங்கேயும்..





நான் முதன்முதலா யார்கிட்ட அடிவாங்குனேன்னு இப்போ ஞாபகம் இல்லேன்னாலும், அந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவத்த பிள்ளையார் சுழி போட்டு மங்களகரமா தொடங்கி வெச்சது என் அம்மாவாதான் இருக்கனுங்கறது என்னோட அவதானிப்பு.

அம்மா.. இவங்க எப்ப அடிப்பாங்க.. எப்படி அடிப்பாங்கன்னே தெரியாது.. ஆனா அடிக்க வேண்டாத நேரத்துல கரெக்டா அடிச்சுடுவாங்க ;-(((
சரியா சாப்டறது இல்ல..சொல்ற வேலையை செய்யறதில்ல.. கடைக்கு போயிட்டு லேட்டா வர்றது .. தம்பிக்கிட்டே சண்டை போடறது.. போன்ற அத்யாவசிய காரணங்கள் தொடங்கி, ஒழுங்கா படிக்கறதில்ல.. பரிட்சையில மார்க் கம்மியா வாங்கறது.. பொறுப்பில்லாம ஊர் சுத்தறது..போன்ற அச்சுபிச்சு காரணங்கள் வரை ஐயா ஆல்-ஏரியாவுலயும் ச்சும்மா கில்லி மாதிரி அடி வாங்கியிருக்கேன்..
 

அடிக்கறதுக்கான காரணங்கள் டிசைன் டிசைனா இருக்கறது மாதிரி, அடிக்கிறதுக்கான ஆயுதங்களும் டிசைன் டிசைனா இருக்கும்..
கரண்டி,தோசைக்கரண்டி, தயிர் கடையும் மத்து போன்ற பேரழிவு ஆயுதங்கள்..
குச்சி, மாடு கட்டும் தாம்புக்கயிறு போன்ற சிற்றழிவு ஆயுதங்கள் ..
இதுபோக அப்பப்போ டைம்-பாஸ் ஆவதற்காக தலையில் குட்டுவது..கிள்ளி வைப்பது..புறங்கையால் அடிப்பது போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களும் உண்டு..

பொதுவா எல்லா ஏரியாவுலயும் எக்கச்சமா, ஏகபோகமா அடி வாங்கியிருந்தாலும் இப்போ நெனச்சிப் பாத்தா ஒரு சம்பவம்கூட ஞாபகம் வர மாட்டேங்குது. (எப்பவாச்சும் வாங்குனா ஞாபகம் இருக்கும்.. எப்பவுமே வாங்கிக்கட்டிக்கிடா எத்தனைன்னு ஞாபகம் வெச்சிக்கறது.?)
இருந்தாலும் ஞாபக அடுக்குகள்ல கூகிள் சர்ச் பண்ணி ரெண்டு சம்பவங்களை மட்டும் சொல்றேன்..

துன்பியல் சம்பவம்-1:
நான் அஞ்சாவது வரைக்கும் சேலத்துல எங்க பாட்டி வீட்ல இருந்துதான் படிச்சேன். அப்பப்போ அப்பா, அம்மா வந்து பாத்துட்டு போவாங்க.. 


அப்போ நான் நாலாப்போ..இல்ல அஞ்சாப்போ படிச்சிட்டுருந்த சமயம். ஒருநாள் பை நிறைய கடலைக்கா, பனங்கிழங்கு, நவ்வாப்பழம் இதெல்லாம் எடுத்துக்கிட்டு அம்மா மட்டும் என்னை பாக்க வந்திருந்தாங்க. போக, பெட்-பாக்கெட் ப்ரூட்டி வேற.. அப்போ டிவி விளம்பரத்துல வர்ற ப்ரூட்டி ரொம்ப ஃபேமஸ்.. நானும் மொதோ மொதலா டிவி விளம்பரத்துல வர்ற வஸ்துவை குடிக்குறோம்'ங்குற குதூகலத்தோட அதை குடிச்சிட்டுருக்க, பேச்சுவாக்குல அப்போ முடிஞ்ச காலாண்டுதேர்வோ, அரையாண்டுத்தேர்வோ.. அந்த எழவுல என்ன மார்க்குன்னு அம்மா கேட்டாங்க. நம்ம மதிப்பெண்கள் அவ்வளவா மதிக்கும்படி இல்லாட்டாலும், காறித்துப்பற வகையில் இருந்துச்சி.. 
ஒக்கே ஒக்க அறை. அவங்க எய்ம் பண்ணது என்னவோ கன்னத்தை நோக்கித்தான். ஆனா நான் சின்னாத்தாளைக் கண்ட புதூ டுவீட்டர் கணக்கா பம்மி பீதியாகி, எசகுபிசகா மூஞ்சியைத் திருப்ப, எய்ம் மிஸ்ஸாகி ஒதட்டுல எறங்கிடுச்சி. லேசா..லேசா ஒதடு கிழிஞ்சி கொஞ்சமே கொஞ்சம் ரத்தம். 

ஒதட்டு ஓரத்துல ரத்தத்தை பாத்த ஒடனே எம்ஜியாருக்கு வீரம் பொங்குறா மாதிரி, எங்கம்மாக்கு பாசம் பொங்கிடுச்சி. அதுக்கப்புறம் பைய்யனை கொஞ்சோ கொஞ்சுன்னு ஒரே கொஞ்சல்ஸ்.. அப்புறமா, அறுகோண வடிவிலாலான இருபது பைசா காசு- நாலு காசுங்களை என் கைல வெச்சி அழுத்தி, எதுனா வாங்கி சாப்ட்டுக்கோ'ன்னு சொன்னாங்க. (அப்பல்லாம் அது பெரிய தொகை- ஆஹா இதுக்காவே அப்பப்போ ரத்தக்காவு கொடுக்கலாம் போலருக்கே-ன்னு நெனச்சிக்கிட்டேன்.. அவ்வ்வ்.. காரியத்துல கண்ணா இருக்கோணும் கொமாரு :P). அதுக்கப்புறம் அந்தக் காசுல என்ன வாங்கி சாப்டேன்'ன்னு ஞாபகம் இல்லேன்னாலும், இப்பவும் எங்காவது இருபது பைசா காசைப் பாத்தா எங்கம்மாவோட ரத்தப்(!)பாசம் மனசுக்குள்ள வந்து குறுக்காலயும், நெடுக்காலயும் வாக்கிங் போகும்.


  துன்பியல் சம்பவம்-2

அடியேன் வெற்றிக்கரமா அஞ்சாப்பு முடிச்சதும், ஆறாவது எங்க ஊர்லையே கொண்டுவந்து சேத்துட்டாங்க. நானும் காலை எழுந்தவுடன் கோலி, பின் மாலை முழுவதும் பட்டம், விடுமுறை தினங்களில் பம்பரம் கில்லி-தாண்டில், கிரிக்கெட் என தீராத விளையாட்டுப் பிள்ளையா சுத்தீட்டு இருந்தேன். அதுபோக, அப்பப்போ தங்கச்சி, தம்பியுடன் சண்டை..  சமாதானம், அப்புறம் மீண்டும் சண்டை.. திரும்ப சமாதானம் என அவ்வளவு அழகோ அழகான நாட்கள். 

நான் சந்தோஷமா இருந்தாத்தான் நம்ம விதி பகவானுக்குப் பிடிக்காதே.? குழந்தைகளின் சந்தோஷத்தை கெடுக்க ஆண்டவன் அருளிய அற்புதம்- பரீட்சைகள். இன்னொரு எழவு காலாண்டுத்தேர்வு வந்தது. வழக்கம்போலவே என்னோட மதிப்பெண்கள் சிலாகிக்கும்படி இல்லாம சில்லரைத்தனமா இருந்துச்சி. (நெஜமாவே சில்லரைத்தனந்தான்- ரெண்டு சப்ஜெக்ட்டுல சிங்கிள் டிஜிட்). என்னோட மார்க்கை நானே என் வாயால சொல்ல முடியாத நாக்கறு நிலைக்குத் தள்ளப்பட்டேன். போக, இப்போ மாதிரியே அப்போவும் எனக்கு தற்புகழ்ச்சி துளியும் பிடிக்காத காரணத்தால், என் பெருமையை நானே எப்படி என் வாயால சொல்றதுன்னும் தெரியல. 

அதனால நான் என்ன பண்ணேன்- சிங்கிள் டிஜிட் சப்ஜெக்ட் பேப்பர்களை மட்டும் நீள வாக்குல மடிச்சி, பேக்'லயும் நீள வாக்குலயே வெச்சிக்கிட்டேன். அதாவது, பேகை பார்த்த ஒடனே, அவங்களே கண்டுபுடிச்சி, பேப்பரை எடுத்து பாக்கணும். இதான் ப்ளான். (வாட் அன் ஐடியா ஷிர்ஜி!?!!!) என் ஐடியா நல்லாவே வொர்க்-அவுட் ஆச்சி. (ஆககா.. ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிராயடா நீ..) அம்மா எடுத்துப் பாத்துட்டாங்க..  அதற்க்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாற்றின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். தங்கம் இப்போ விக்குற வெலைக்கு பொன்னெழுத்தில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெண்கல எழுத்திலாவது பொறிக்கப்பட வேண்டும்.. அவ்வ்வ்.. என்னா அடி.?
 

 பக்கத்தில் கிடந்ததொரு பருத்திக்குச்சி. அதை எடுத்து செம்ம மாத்து. அடிக்கும் போது ஊடால தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்குற மாதிரி ஒரு வாக்கியம் சொன்னாங்க பாருங்க- "பெரிய நூத்துக்கு நூறு மார்க்கு வாங்குனவனாட்டம் பேப்பரை திமிரா மடிச்சி வெச்சிருக்க.. அவ்ளோ தெனாவெட்டா ஒனக்கு.?" அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, நான் மார்க் கம்மியா வாங்குனதை விட, பேப்பரை அப்டி வெச்சிக்கிட்டு வந்ததுதான் அவங்க கோவத்தை ஹெவியா கெளறி விட்ருக்குன்னு.  (அவ்வ்வ்வ்.. என் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய்விட்டனவே.? )
 


 இவ்ளோ அடி அடிச்சாலும் அவங்ககிட்ட இருக்க ஒரு நல்ல பழக்கம், கை..கால், முதுகு..போன்ற எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஏரியாவுல மட்டுந்தான் அடிப்பாங்க..நான் அந்த வயசுலேயே நெம்ம்ம்ப பெர்சனாலிட்டியா(!) இருந்ததால, அதுக்கு குந்தகம் விளைவிக்கற வகையில் மூஞ்சியில மட்டும் அடிக்கவே மாட்டாங்க..
 

டிஸ்கி-1: ஒரு ஒன்னுந்தெரியாத அப்பாவிப்பைய்யனை போட்டு இந்த அடி அடிச்சதுனால, சிஎம் மம்மி மாதிரி எங்க மம்மியையும் லேடி ஹிட்லர் அப்படின்னு நெனைச்சுடாதீங்க மக்களே..
மை அம்மா இஸ் பெஸ்ட் அம்மா இன் திஸ் வேர்ல்ட்..
அவங்களப்பத்தி சொல்லனும்னா புதுசா
ஒரு ட்விட்லாங்கர் போட்டு, அதுல ஆயிரத்தைநூறு பக்கத்துக்கு எழுதலாம்.. அவ்ளோ நல்ல விஷயமிருக்கு..
 

டிஸ்கி-2: இந்த போஸ்ட்டுக்கு "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..", "ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ சிகாமணி.." போன்ற கமெண்ட்டுகள் வரவேற்க்கப்படுகின்றன.!!

மாதா-வைத் தொடர்ந்து அடுத்த
போஸ்ட்டில் பிதாவின் வீரப்பிரதாபங்கள்..

 ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
 

தொடரும்..

Friday, June 15, 2012

சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி


சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி
(சாப்டு வயித்தக் கலக்கினா நான் பொறுப்பல்ல.)

எத்தினி நாள்தான் வெறும் சோறு, தயிருன்னு சாப்ட? சாம்பார் வைப்போம்னு
களத்துல குதிச்சோம். நேரா ரிலையன்ஸ் ஃபிரெஷ் போயி கெடைச்ச காய்கறி
எல்லாத்தையும் வாங்கி கூடைக்குள்ள போட்டோம். இந்த திடீர், பகீர்
முயற்சியின் பலனாக சாம்பார் செய்யக் கற்றுக்கொண்டோம். தங்களின்
  உபயோகத்திற்காக இங்கே பகிர்கிறேன்.

இது முற்றிலும் ஆண் பேச்சிலர்களுக்கு மட்டுமான பதிவு. பெண்கள் காபி
அடிக்க வேண்டாம்.

தேவையான (எனக்குத் தெரிந்த) பொருட்கள்:
1.      து.பருப்பு*             -       100கி
2.      பா.பருப்பு**            -       50கி
3.      உ.உ.பருப்பு***  -       கொஞ்சூண்டு
4.      கடுகு                   -       கொஞ்சூண்டு
5.      சீரகம்          -       கொஞ்சூண்டு
6.      வெந்தயம்                -       மிகக் கொஞ்சூண்டு
7.      புளி                    -       ஒரு நெல்லிக்கா சைஸ் தண்ணில ஊறப்                                         போடணும்.
8.      கறிவேப்பிலை     -       கொசுரு
9.      மல்லி இலை       -       கொசுரு
10.     காஞ்ச மிளகாய்   -       4
11.     சிறு உள்ளி      -       10
12.     பெரு உள்ளி      -       1
13.     கத்திரிக்கா, மாங்கா, உருளைக்கிழங்கு, முருங்கக்கா, தடியங்கா, சௌசௌ,முள்ளங்கி, வெண்டக்கா
(any one or any two or combinational as your wish – inki pinki ponki)
14.     மஞ்சப் பொடி     -       1 டீஸ் ஸ்பூன்
15.     மிளகாய்ப் பொடி  -       1 டீஸ் ஸ்பூன்
16.     சாம்பார் பொடி   -       தெர்ல மக்கா, கலர் வர்ற அளவு போட்டுக்கோ.


செய்முறை:

•       முதல்ல நாலு நாளா கழுவாம இருக்குற பாத்திரத்த எல்லாம் கழுவிக்கோங்க.
•       காய்கறி எல்லாம் நறுக்கி வச்சுக்கோங்க.
•       முதல்ல அடுப்ப பத்த வைங்க.
•       து.ப.வோ, பா.ப.வோ இல்ல ரெண்டும் சேர்ந்தோ காம்பினேசன்ல குத்து மதிப்பா எடுத்துக்கோங்க.
•       பருப்பக் கழுவனும். நோ சோம்பேறித்தனம். இல்ல பங்கஸ், ஆல்கா, புழு
எல்லாம் வயித்துக்குள்ள போவும். அப்புறம் நான்தான் சாம்பார் செய்ய சொல்லித்தந்தேன்.. என்னாலதான்  ஃபுட்-பாய்சன் ஆயிருச்சுன்னு கம்பிளைண்ட் பண்ணப்பிடாது.
•       காய்கறியையும், நறுக்கின வெங்காயத்தையும் கழுவி குக்கர்ல, பருப்போட போடுங்க.
•       தண்ணிய வேணுங்குற அளவு (அந்த வேணுங்குற அளவு எனக்கும் தெர்ல) தோராயமா ஊத்திக்கோங்க.
•       அடுப்பப் பத்த வச்சு, குக்கர் வாய மூடி அதுல வைங்க.
•       பிரஷர், டென்சிட்டி, வெலாசிட்டி மெஷர் பண்ணி குக்கர் வெயிட்டப்
போடணும். வெரி இம்பார்டண்ட்.
•       கொஞ்ச நேரங்கழிச்சு குக்கர் விசில் போடும். எண்ணணும் ஒன்னு, ரெண்டு, மூனுன்னு, . . .
•       கருகின வாட வர்றதுக்கு முன்னாடியே குக்கர எடுத்துறணும். அவ்ளோதான்.
•       எப்பக் கருகும்ன்னு சொல்ல மிடியாது. இதுக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்.
•       அப்புறம் ஒரு கடாய்ய அடுப்புல வைக்கணும்.
•       ஜோ நல்லெண்ணெய் கொஞ்சம் (அவ்வ் லிஸ்ட்ல மறந்துட்டேன்) ஊத்தணும்.
•       இங்கதான் டைமிங் முக்கியம்.
•       கடுக எண்ணெய் காஞ்சதும் போடணும். எண்ணெய் எப்ப காயும்ன்னு கைய்ய விட்டுப் பாக்க வேணாம்.
•       கொஞ்சம் சீரகம், ரொம்ப கொஞ்சமா வெந்தயம் அதுல போடுங்க.
•       கடுகு வெடிக்கணும். ( அது எப்பிடின்னா கடுகு டொப்பு, டொப்புன்னு வெடிக்கும்.)
•       காஞ்ச மிளகாயையும், கருவேப்பிலையும் அதுல போடுங்க.
•       அப்புறம் அப்புறம் புளியக் கரைச்சு அதுல ஊத்துங்க.
•       இங்கதான் சேஃப்டி ப்ரிகாஷன் முக்கியம். தண்ணிக்கும், எண்ணெய்க்கும்
ஆவாது. பர்ணால் பக்கத்துல வச்சுக்குறது நல்லது.
•       கொஞ்சம் மஞ்சப் பொடி, அளவா மிளகாய்ப் பொடி போட்டு கலக்குங்க.
•       தென் சாம்பார் பொடி போடணும். (இஃப் இண்டெர்ரெஸ்டேட் இன் ரெட் கலர் ஆட் மோர். மறுநாள் பின்னாடி ரெட் லைட் எரிஞ்சா கம்பெனி பொறுப்பல்ல.)
•       அதுல வெந்த பருப்பு, காய்கறியப் போடுங்க.
•       எல்லாத்தையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க.
•       உப்பு ஒரு ரெண்டு,மூனு ஸ்பூன் போட்டுக்கோங்க.
•       சாம்பாரக் கொதிக்க விடணும். (முக்கியமா, நீங்க இப்ப வச்சத சாம்பார்ன்னு நம்பணும்.
நம்பினாத்தான் ரெசீபி சக்ஸஸ்).
•       மல்லி இலைய துண்டு துண்டா நறுக்கி சாம்பார் மேலத் தூவி மேக்கப் பண்ணனும்.
•       அட சட்டிய அடுப்புலருந்து இறக்கிருங்க. இதுக்கு மேல அத ஒன்னும் பண்ண முடியாது. விதி விட்ட வழி.

எச்சா தகவல்கள்:
•       *து.பருப்பு – துவரம் பருப்பு; **பா.பருப்பு – பாசிப் பருப்பு;
***உ.உ.பருப்பு – உடைத்த உளுத்தம் பருப்பு.
•       சாம்பார் தண்ணி ஆயிருச்சுன்னா கவல வேண்டாம். மேலாப்ல ஊத்தினா ரசம் எனக்
கொள்க. கலக்கி ஊத்தினா சாம்பார் எனக்கொள்க. சிம்பிள்.
•       எந்த காய்கறி அதிகமா போடுறீங்களோ அதுதான் அந்த சாம்பார் பேரு.
•       கத்திரிக்கா போட்டா கத்திரிக்கா சாம்பார். முருங்கக்கா போட்டா
முருங்கக்கா சாம்பார். சாம்பாருக்கு பேரு வைக்குறது ரொம்ப ஈஸி.


 பின் குறிப்பு:
•       இங்கு படித்தது, பார்த்தது எல்லாம் பல செயல்முறைக்களுக்கு
உட்படுத்தப்பட்டு பல வெற்றி, தோல்விகளைக் கடந்து பல ஆராய்ச்சிகளின்
முடிவில் இப்பதிவு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
•       தங்களின் இம்முயற்சிகள் தங்களின் சுயசிந்தனையிலும், துணிச்சலிலும்
எடுக்கப் பட்டவை.
•       தங்களின் சாம்பாரால் தங்களுக்கு எந்த உடல் உபாதை ஏற்படினும் தங்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் இது கவர் ஆகுமா என உறுதி செய்து கொள்க.
•       தாங்கள் சாம்பார் செய்ய எந்த விதத்திலும் கம்பேனியால் வற்புறுத்தப் படவில்லை.
•       “யாம் பெற்ற இன்பம்” என்ற நல்லெண்ணைய்லேயே ச்சே நல்லெண்ணத்திலேயே
இப்பதிவு வெளியிடப் பட்டது.
•       இது சாம்பார் வைக்கத் தெரியாத எந்த பெண் ட்விட்டர்களையும் கலாய்க்கும்
நோக்குடன் எழுதப் படவில்லை.
•       தங்களுக்கு எந்த வித “பின்”விளைவுகள் ஏற்பட்டாலும் கம்பேனி பொறுப்பல்ல.
•       தங்கள் செய்முறை தோல்வியடைந்தால் கம்பேனி வாசல்ல வந்து துப்பக் கூடாது.
•       சாம்பார் சரியில்லேன்னா ஆறு அடி குழி தோண்டி புதச்சிருங்க. நாயி, பூன
ஏதும் மோந்து பாத்து செத்துறாம.
•       தப்பித் தவறி சாம்பார் நல்லா வந்துருச்சுன்னா அதன் ராயல்டி கம்பேனியை
மட்டுமே சாரும்.

தங்களன்புள்ள,
ஜெகன் ஜீவா

Wednesday, May 30, 2012

"ஏற்படக்கூடாததொரு முன்னேற்பாடு"



சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். கல்லூரி
முடிந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம். அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்துகளும் சேர்ந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் சிறு வாகன நெரிசலை உருவாக்கியிருந்தன. ஒரு அரசு பேருந்தின் பின் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கட்டுபாடு இழந்து அந்த பேருந்து மீது மோதியதில் நடுவில் சிக்கி இருவரும்........

ஒருவர் உடலில் எந்த காயமும் இல்லாத போதிலும் தலையில் அடிபட்டு
உதிரம் வீணாகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.(தலைகவசம் அணிந்திருந்தால் அவர் பிழைத்திருக்கலாம்.) இன்னொருவர் அதிர்ஷ்ட்டவசமாக பலத்த காயங்களோடு உயிர் தப்பினார். 
அவரை வாகனத்தின் இடிபாடுகளில் இருந்து விடுவித்து சாலை ஓரம் கிடத்தி உதிரப்போக்கு  நிற்க முதலுதவி செய்வது,
108க்கு அழைப்பது என நாங்கள் மும்முரமாக இருந்தோம். உண்டான வாகன நெரிசலால் அவசர ஊர்தி சாலையின் எதிர்ப்பக்கம் தான் வந்தது. அவரை தூக்கிக்கொண்டு சாலையை கடந்து அவசர ஊர்தியில் ஏறி அமர்ந்தபின் ஆசுவாசமடைந்து அவரிடம் வீட்டு தொலைபேசி எண் கேட்டால் அவருக்கு நினைவில் இல்லை. சட்டை பையில்  இருந்த சில காகிதங்கள் எதிலும் எந்த எண்ணும் இல்லை. அவரது அலைபேசி விபத்தின் தாக்கத்தில் எங்கோ சென்று விழுந்துள்ளது. அவரிடம் அவரது தொலைபேசி எண் வாங்கி அதற்கு அழைத்தோம். எடுத்தவர் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி இவரது இல்ல எண்னை  (செல்வின்னு பேர் போட்டு இருக்குங்க...) தெரிவிக்குமாறு கேட்டேன்.
இதோ பார்த்து சொல்லுவதாக கூறி அழைப்பை துண்டித்தார். பல நிமிட
காத்திருப்பின் பின்  திரும்ப அழைத்தால் அலைபேசி அணைத்து
வைக்கப்பட்டிருந்தது.  
இங்கு இவரோ அரை மயக்கத்தில்.. (பேச்சு கொடுத்து எண்னை நினைவுபடுத்த சொல்லிக்கேட்டால் தெரியாது/ நினைவில் இல்லை என்பதே பதிலாக இருந்தது. எதாவது சில எண்களையாவது  நினைவுகூற
முயற்சிக்கவுமென  வற்புறுத்தி, அவரை கூற வைத்தோம். அவர்
தோராயமாக கூறிய நான்கு ஐந்து எங்களுக்கு  அழைத்துப் பார்த்தோம், அனைத்தும் தவறான அழைபுகளாயின. பின்பு நினைவு வந்தவராக ஒருவரது எண்ணை கூறினார். அது அவரின் தம்பியின் நண்பனின் எண்ணாம். அவர் மூலம் தம்பி எண் வாங்கி விஷயம் தெரிவித்தோம்.
அவர்களது வீடு செங்கல்பட்டிலேயே இருந்ததால் நாங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை போய் சேர்க்கையில் அவரது குடும்பதினரும் வந்து சேர்ந்திருந்தனர்.

நினைத்து பாருங்கள் அவருக்கு கடைசி வரைஅந்த எண் நியாபகம் வராமல் இருந்திருந்தால்.?? அல்லது அதிர்ச்சியில் நினைவு தப்பி இருந்தால்.??
(வாகனத்தின் பதிவு எண் கொண்டு கண்டுபிடித்திருக்கலாம் என பல வழிகள் காவல்துறையினருக்கு இருந்தாலும்...) எங்களால் என்ன செய்திருக்க இயலும்.???

நான் கூற வரும் விஷயங்கள்:


1)மொபைலில் தங்கள் உறவினர் எண்ணை உறவுமுறை சேர்த்து சேமித்து வையுங்கள்.
(ICE என சேமிக்கும் வழக்கம் பரவலாக வெளிநாட்டில் கடைபிடிக்க பட்டாலும் இந்தியாவில் அதை பற்றிய விழிப்புணர்வு  வெகு குறைவே, பார்க்க http://en.wikipedia.org/wiki/In_case_of_emergency)
2)சட்டைப் பையில்/கைப்பையில் ஒரு காகிதத்தில் முக்கியமான தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருக்கவும்.

3)குறைந்தது ஒருவரின் எண்ணையாவது மனனம் செய்து கொள்ளவும், அவசர காலத்தில் பேப்பரில் இருக்கும் எண் கிடைக்காமல் போகலாம், மொபைல் தொலைந்து போகலாம். முக்கியமாக பெண்கள் அனைத்து உபகரணங்களையும் கைப்பையில் மட்டுமே வைப்பர், அவசரகாலத்தில் அதை தேடுவது சத்தியமல்லாதது. காணாமல்/தொலைந்து போக கூடிய வாய்ப்புகள் அதிகம்.

4)ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவத் தயங்காதீர்கள். மருத்துவமனையில் அனுமதித்தபின் அங்கிருந்த காவல் அதிகாரி, எங்களிடம் ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொன்னார். எங்கள் விவரம் மற்றும் கையொப்பமும் பெற்றுக்கொண்டார். அவ்வளவுதான். இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை. பொதுவாக கூறபடுவது போல் அலைகழிக்கபடும் அபாயம் எதுவும் இல்லை.ஆதலினால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய தயங்காதீர்கள்.

5) கட்டாயம் தலைக்கவசம் அணியவும். கண்முன்னே ஒரு உயிர் கணநேரத்தில் பிரிந்தது தலைக்கவசம் அணியாத ஒரே காரணத்தால். (அவர் ஓட்டிக் கொண்டு வந்தது புத்தம் புது வண்டி என்பதை கண்டபொழுது, வாங்கி கொடுத்து வழி அனுப்பி வைத்த பெற்றோர் கண்முன் நின்றனர்)

6) கடைசியாக- முக்கியமாக விபத்தில் ஒருவர் அடிபட்டால்,
->எரிகிற வீட்டில் பிடிங்கினது லாபமென விபத்து நடந்த இடத்தில் களவாட முயற்சிக்காதீர்கள்.
->உதவி செய்ய மனமில்லாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.
-->சுற்றி நின்று கூட்டம் கூட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும், கூட்ட நெரிச்சலால் வாகன நெரிசல் ஏற்ப்படும், உதவி ஊர்தி வந்து சேர தாமதமாகும்.

இந்தப் பதிவை படித்து, உங்கள் நண்பர்/ கணவர்/ தந்தை அல்லது உடனே உதவக்கூடிய ஒருவரின் எண்ணை தாங்கள் நினைவில் வைத்து கொண்டால் I WOULD BE HAPPY.!!

டிஸ்கி: வாசிப்பவரின் மன நிலையை பாதிக்க கூடாது என்பதற்காக விபத்தின் கோரத்தை அதிகமாக வர்ணிக்கவில்லை, ஆனால் அந்த கோரத்தின் தாக்கமே இந்த பதிவின் மூலம் உங்களை வற்புறுத்துவதன் காரணம்.

(108  அவசர ஊர்தி சேவையை பாராட்டியே ஆக வேண்டும்...முதல் அழைப்பிலேயே தேவையான விஷயங்களை கேட்டு தெளிவான தகவல் தந்தது..... 10  நிமிடங்களில்  ஊர்தி வந்து சேர்ந்தது..... வாகன நெரிசலில் தாமதமாகுமென மாற்று திசையில் வாகனங்களின் எதிர் திசையில் வந்தது...வந்த மருத்துவ சிப்பந்தியின் துரித  உதவி...அனுமதித்த பின் நாங்கள் அளித்த பணத்தை ஏற்க்க மறுத்தது என முழுதும் ஆச்சரியங்கள்!!)

அன்புடன்,
சந்தோஷ் @_santhu

Monday, May 28, 2012

அண்ணா நூலகத்தில் இரு அப்பாடக்கர்ஸ்


அண்ணா நூற்றாண்டு நூலகம்- ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்னரை வருட காலத்தில் போகவேண்டுமென பலமுறை திட்டமிட்டு சந்தர்ப்பம் சமையாமலேயே  இருந்தது. இந்த ஞாயிறு செல்லவேண்டுமென முடிவெடுத்தபின் முதலில் ஐந்துபேர் குழு செல்வதாக திட்டமிட்டு, முடிவில் வழக்கம்போல திட்டமிட்ட என்னையே திட்டிக்கொள்ள வேண்டியிருந்தது  -திட்டம் சொதப்பல். கட்சிப்பணிகளும், காதல் பணிகளும் பின்னால் அழைத்த காரணத்தால் மூவர் முன்கூட்டியே சொல்லிவிட்டு முன்வாங்கிவிட,  மிச்சமிருந்த இரு மனந்தளரா விக்கிரமாதித்தியர்களும் இலக்கியத் தண்ணீர் தேடி கடுந்தாகத்துடன் நூலகம் நாடிச்சென்ற கதையிது.! 

இருவரில் ஒருவர் பிரபல அப்பாடக்கர் கீச்சர் கவிதைப்போராளி கருப்பையா; மற்றவர் உப அப்பாடக்கர் கீச்சராகிய நான்.. 

முதலில் ஒன்பது தளங்களுடன் ஒய்யாரமான ஐந்து நட்சத்திர ஓட்டலையொத்த பிரம்மாண்டமானதொரு நூலாக கட்டிடத்தை பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் வியப்பு கலந்த சிலிர்ப்போடியது உண்மை. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாம். நாங்கள் வலதுகாலை முதலில் எடுத்துவைத்து உள்நுழைய,  மங்களகரமாய் மஞ்சள் சுடி தரித்ததொரு மங்கை உள்ளிருந்து வெளியேற, ஆகாகா.. நல்ல சகுனமென கருப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள (அஃப்கோர்ஸ்..அவன் கன்னத்தில்தான்)- எந்தஒரு இந்தியசினிமா  இயக்குனரும் மறுகேள்வி கேட்காமல் அங்கொரு கனவுப்பாடலை வைப்பதற்கான அற்புதமான சிச்சுவேஷன் அது. நான்கூட வெனிஸ் + சுவிசில் விதவிதமான லொக்கேஷனில், வகைவகையான காஸ்ட்யூமில் டூயட்டெல்லாம் பாட ஆயத்தமாகிவிட்டேன். சட்டென என் மண்டைக்கும் இலக்கிய கண்டக்டர் ஒருவர் விசிலடிக்க, எங்களது வண்டியை இலக்கியம் நோக்கி யூ-டர்னினோம்.

ஒருவழியாக கொண்டுவந்திருந்த பேகி'ற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு,  உள்லேறியதும் ஆரம்பத்திலேர்ப்பட்ட எனது வியப்பினளவு வியக்கதகுமளவுக்கு கூடிக்கொண்டே சென்றது.!  
முழுக்கவும் குளிர்ச்சாதன வசதியிடப்பட தளங்கள்,அமர்ந்து படிப்பதற்கு நல்ல காற்றோட்டமான, விஸ்தாரமான, வெளிச்சமான இடவசதி, சுகமான குஷன் இருக்கைகள்.. -அடடா.. என் போன்ற புத்தக  ஜந்துகளுக்கு பூலோக சொர்கமய்யா...

அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எக்கச்ச்ச்ச்ச்ச்சக்கமான (தோராயமாக ஐந்து லட்சம் "ச்"-கள் போட்டுக் கொள்ளலாம்-அவ்வளவு புத்தகங்களாம்.) புத்தகங்களை பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவு சிறியவன் என்கிற எண்ணம் லட்சதியோராவது முறையாக வந்ததுபோனது.நெறைய்ய்ய்ய வளரனும் கொமாரு நீ.. 

உள்ளே கணிசமான அளவுக்கு கூட்டத்தை பார்த்தது கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சி; அன்று ஞாயிறு + கோடை விடுமுறை என்கிற வகையில் அது மிகமிக கணிசமான கூட்டம்தான் என்பதில் நிறைய வருத்தம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்த பெற்றோர்களை பார்க்கையில் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. தரைத்தளத்திலுள்ள உணவகத்தில் வழக்கம்போல  கூட்டம் அம்மியது #தமிழேன்டா.

முதல் தளத்தில் பருவ இதழ்கள் என்கிற பிரிவைப் பார்த்ததும் ஓடோடிச்சென்று பருவம், மருதம், குயிலி முதலிய இதழ்களைத் தேடினோம். அவ்வ்வ்வ்..  வார, மாத இதழ்களுக்கான பிரிவாம்.. ச்சே..வட போச்சே-என நொந்துக்கொண்டு அடுத்த தளத்திற்குள் நுழைந்தோம்.

இரண்டாம் தளம்- தமிழ்த் தளம். அதனுள் கவிதை அடுக்கை பார்த்ததும் கருப்புவுக்கு கவுஜைவெறி அதிகமாகி கார்பெட்டை பிராண்ட ஆரம்பித்தான். உடனே பக்கத்து ரேக்கிலிருந்த ஜீரோ டிகிரியை எடுத்து முகத்துக்கு மூணு இன்ச் க்ளோஸ்-அப்பில் காட்டி, பைய்யனை நார்மல் மோடுக்கு கொண்டு வந்தேன்..அவ்வ்வ்வ்..
அங்கனதான் நம்ம விதி பகவான் என்ட்ரி.. எங்கள் பின்னாலேயே வந்தவர், நேராக ஹாலின் சனி மூலைக்கு சென்று அமர்ந்துகொண்டு எங்களைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார். விதியாரின் திருவிளையாடலின் ஆரம்பமாக சாருவாரின் "எக்சிஸ்டென்ஷிலியசமும், ஃபேன்சி பனியனும்" நாவல் என் கண்ணில் பட்டுத்தொலைக்க- "மாப்பி.. ஒரு அரைமணி நேரம் இங்க சுத்திப் பாத்துட்டு இருக்கியா.. நான் அதுக்குள்ளே இந்த புக்கை முடிச்சிடுறேன்.?" -எங்க அப்புச்சி சத்தியமா எப்பயும்போல சாருவை கலாய்க்க, ஒரு காமெடிக்குத்தான்யா கேட்டேன். பயபுள்ள நம்ம கருப்புவுக்கு ஞாயிறன்று சனி உச்சத்துல இருந்துருப்பான் போல -"இருங்க மாம்ஸ்..நானும் வர்றேன்.. சேர்ந்து படிக்கலாம்" சனியாரும், விதியாரும் விலையில்லா வலைய விரிக்குறாய்ங்க சாருவார் ரூபத்துல..

நூத்தினாலு பக்கமே உடைய சின்ன புத்தகம், ரொம்பநேரமா நடந்த டயர்ட்நெஸ், கால்வலி, கொஞ்சநேரம் ஒக்கார்ந்தா தேவலை போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உப காரணங்களும் சேர்ந்து கொள்ள, இப்போது விதியாரின் நமட்டுச்சிரிப்பு கொடூர வில்லச்சிரிப்பாக உருமாறிக்கொண்டிருந்தது. முடிவு பண்ணி ஒக்காந்துட்டோம். சேம் சனிமூலை.. விதியாருக்கு பக்கத்துபக்கத்து இருக்கை. 
"மிஸ்ட்டர் விதியார்.. யுவர் மிஷன் அக்கம்ப்ளிஷுடு..போயி வேற எவனாச்சும் அப்பாவியை புடி.. கெட் லாஸ்ட் யூ ட்ரோலு"-ன்னு அந்தாளு மூஞ்சில காறித் துப்பிட்டு ஆரம்பிச்சோம்...படிச்சோம்.. 
அப்பப்போ நீதாண்டா இதுக்கு காரணம்'ங்கற தொணில ரெண்டுபேரும் மொறச்சி பாத்துக்கிட்டோம் .. அப்புறம் திரும்ப படிச்சோம்..அப்புறம் திரும்ப மொறச்சோம்..திரும்ப படிச்சோம்.திரும்ப... சரி விடுங்க எங்க கஷ்டம் எங்களோட போகட்டும்.. இடையில பப்ளிக்கா பத்துபேர் பாத்துட்டுருக்காங்க'ங்கற பிரக்ஞை துளிகூட இல்லாமல் நித்திராதேவி என்னைத் தழுவியதால் என்னையுமறியாமல் கண்ணயர்ந்த இரண்டு நிமிடங்களையும் சேர்த்து, ரெண்டுமணி நேரத்துல படிச்சி முடிச்சேன். என்னத்தை சொல்ல..? என் வாழ்வில் வீணடித்த பலநூறு இரண்டுமணி நேரங்களில் மிகக் கொடூரமான இரண்டு மணி நேரங்கள்..ஆஆவ்வ்வ்வ்.. 

கருப்பு முடிக்கிற வரைக்கும் கவிதை செக்ஷன்'ல பராக்கு பாத்துட்டுருந்தேன். குட்டி ரேவதி புக்கெல்லாம் இருந்துச்சி. அதுல நான்  எதிர்பார்த்த(!) புக்கு இல்லாததால, திரும்ப அந்தத்தளம் முழுசும் இன்னொருமுறை பராக்கிங்.
பத்து நிமிஷத்துல கண்ணுல மரண பீதி தெரிய கருப்ஸ் வந்தான்..எனக்கும் அதே பீதிதான்..சோ,"சேம் சுவீட்டு மாப்பி"-ன்னு சொல்லி வெளீல கூட்டிட்டு வந்தேன். முள்ள முள்ளால்தான் எடுக்கணும்'ன்னு அன்னிக்கு காலைல தேதி கிழிக்கும் போது படிச்ச தத்துவம் சட்டுன்னு ஞாபகம் வர, கீழ இருக்க கேண்டீனுக்கு போனோம். சனியார்+விதியார்+ சாருவார் -இவர்களின் கூட்டுச்சதிநீர் திட்ட இலக்கியநீரை குடித்ததானலான கசப்புணர்வை போக்க டிகாஷன் தூக்கலாக, கடுங்ககசப்பான காப்பி ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு கெளம்பினோம் (அஃப்கோர்ஸ்..காசு குடுத்துட்டுத்தான்.!)  
இதற்கிடையே ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, உணவகத்தில் பார்த்ததொரு பெண்ணைப்பற்றி கருப்பு வர்ணிக்க ஆரம்பித்திருந்தான். சிலபல கவுஜைகள் வரலாம் என்பதை அவதானித்து "வேற ப்ளோர் போலாம்டா.." -என பேச்சை மாற்றி இழுத்து வந்தேன். பிறவிக்கவிஞனுங்க கூட சகவாசம் வெச்சிக்கிட்டா இதான்யா பெருந்தொல்லை. ஆன்னா..ஊன்னா கவுஜை சொல்ல ஆராம்பிச்சிடுறாய்ங்க.. பேடு ஃபில்லோஸ்...

அடுத்தடுத்த தளங்களில் குழந்தைகள், மருத்துவம், அரசியல், பொருளாதாரம், உளவியல், தத்துவம், பொறியியல், கணிதம்,புள்ளியியல், மொழியியல், வரலாறு, விளையாட்டு, புகைப்படக்கலை என்ன எண்ணற்ற தலைப்புகளில் எக்கச்சக்க புத்தகங்கள்  நிறைந்திருக்கின்றன.. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்.. அங்கெல்லாம் சும்மா போய் ஒரு விசிட் மட்டும் பாத்துட்டு வந்துட்டோம்.
ஏழாம் தளத்தில், ஏதோ ஒரு புத்தகத்தை கருப்பு வெறித்தனமாக புரட்டிக்கொண்டிருக்க, அந்தப் பிரிவின் தலைப்பைப் பார்த்து நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் -"Pornography"  என்னாது..? இதுக்கெல்லாம் தனீ பிரிவான்னு குதூகலத்தோட கிட்டக்கப்போயி பாத்தா அது "Photography"-யாம். 
பசி கூட்டல் தூக்க மப்புல என் கண்ணு அந்த லட்சணத்துல தெரிஞ்சிருக்கு. திரும்ப ஒருமுறை வட போச்சேன்னு நொந்துகிட்டே கீழ எறங்கிவந்தோம்.

ஆரம்பிக்கும் போது ஐந்து லட்சம் புத்தகங்களுடன் ஆரம்பித்த நூலகம், கூடிய விரைவிலேயே பனிரெண்டு லட்சம் புத்தகங்களை எட்ட இலக்காம்.
அதேபோல் அசத்தலான வடிவமைப்பில் ஒரு திறந்தவெளி அரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டுக்குமே ஆத்தா மனசு வைக்க வேண்டும்..ஹ்ம்ம்..பார்ப்போம்..

கூட்டல்கள்:

* படிப்பதற்கான அட்டகாசமான சூழல்.
* விஸ்தாரமான இடவசதி- படிப்பதற்கும், வாகன நிறுத்தத்திற்கும்..
* வெளியிலிருந்து நமது சொந்த புத்தகங்களையும் உள்ளே எடுத்துவந்து   படித்துக்கொள்வததற்கான ஏற்ப்பாடு. சொந்த மடிக்கணினிகளை உள்ளே பயன்படுதுவதர்க்கான அனுமதி. இரண்டுமே மிகச்சிறப்பான முயற்சிகள்.
* பார்வையற்றோருக்கான தனி ப்ரேயிலி செக்ஷன்.
* நல்ல விஸ்தாரமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குழந்தைகளுக்கான பகுதி. இதுவும் ஒரு அருமையான முன்னேற்ப்பாடு. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சூழலின் மூலம் அவர்களை கவர்ந்து, பின்னாட்களில் அவர்கள் வளர்ந்தபின்னரும் நூலகம் தொடர்ந்து வர வைப்பதற்கான நல்ல முயற்சி.
* படிப்பறை முதல் கழிவறை எங்கேயும்..எப்போதும் தென்படும் சுத்தம். ஒரு ஸ்டார் ஹோட்டல், ஹாஸ்பிட்டல் போல எல்லா தளங்களிலும் பணியாளர்கள் நிறையப்பேர் அவ்வபோது சுத்தம் செய்துகொண்டே இருக்கின்றனர்.
* கணினி தொடுதிரை மூலம் நமக்கான புத்தகங்களை எந்த தளத்தில், எந்த வரிசையில் உள்ளது போன்ற தகவல்களை பெறுவதற்கான வசதி.
*மற்ற அரசு அலுவலகங்களை போலல்லாமல் எல்லா பணியாளர்களும் மக்களுடன் இணக்கமாக, ஏதேனும் தகவல் கேட்டால் சலித்துக்கொள்ளாமல்  புன்சிரிப்புடன் நமக்கு உதவுகிறார்கள்.
*புத்தகங்கள் கலைந்திருந்தாலோ, அல்லது மேசையில் கிடந்தாலோ உடனேயே ஒரு சிப்பந்தி வந்து அலமாரியில் சரியாக அடுக்கி வைக்கிறார். 
*ஒவ்வொரு புத்தகத்திற்கு குறைந்தபட்சம் நான்கு காப்பிகள் உள்ளன.நமக்குத் தேவையான புத்தகம் வேறொருவர் வைத்திருந்தாலும் அவர் முடிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

*இரண்டாவது தளம் வரை எஸ்கலேட்டர் வசதி. எல்லா தளங்களுக்கும் லிப்ட் வசதி.

கழித்தல்கள்:

*இவ்வளவு பெரிய இடத்திற்கு உணவகம் மிகச்சிறியது. சிலவகை உணவுகள் மட்டுமே உள்ளன. இன்னமும் நிறைய வகைகள் சேர்த்து பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
*ஒவ்வொரு தளத்திலும் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பழங்கால ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் பிரிவை காண ஆவலுடன் சென்றோம். அனுமதி இல்லையாம்.
*எல்லா தளங்களிலும் உள்ள அறிவிப்பு பதாகைகள் தமிழில் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்திலும் இருக்கலாம். முழுக்கவே ஆங்கில புத்தகங்கள் நிரம்பிய தளங்களில் அறிவிப்புப் பதாகை தமிழில் மட்டுமே இருப்பது சற்றே அபத்தமாக பட்டது எனக்கு.
*போலவே இன்னுமொரு அபத்தம் Rest room -என்பதற்கு "ஒப்பனை அறை" என்றவாறான முழி'பெயர்ப்பு.. பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு தாளவில்லை.

உண்மையில் இந்த நூலகம் குறித்து இந்த தலைமுறை தமிழர்களும், வரும் தலைமுறை தமிழர்களும் இது எங்கள் பெருமையென சர்வ நிச்சயமாக கூறிக்கொள்ளலாம். இதை மாற்றியே ஆகவேண்டுமென அடம்பிடிக்கும் அம்மையாருக்கு எனது ஒரே வேண்டுகோள் இதுதான். தயவு செய்து இங்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டு முடிவெடுங்கள்.
அதற்கப்புறமும், மருத்துவமனையாக மாற்றித்தான் தீருவேனென சொன்னால், ஒரே வழிதானிருக்கிறது. இதனை முழுக்கவே மனநல மருத்துவமனையாக மாற்றிவிட்டு, பச்சை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கையோடு தானே முதல் பேஷண்டாக சென்று அங்கே படுத்துக்கொள்ளலாம்.!

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்
:-)))


நூலகம் பற்றி மேலதிக விவரங்களுக்கு:

http://annanootrandunoolagam.blogspot.in/
http://www.annacentenarylibrary.blogspot.in/