Tuesday, June 4, 2013

வெயிலோடு விளையாடு..



வெயில்காலம் ஆரம்பிச்சா போதும்..நம்மாளுங்க அதை வெச்சி ஆடுற காமெடி கதகளிக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டுருக்கு.. ஆளாளுக்கு நடமாடும் ரமணனா அவதாரம் எடுத்து கொதிக்கக் கொதிக்க வானிலை அறிக்கையை வாளீல மொண்டு ஊத்த ஆரம்பிச்சிடுவாங்க..

இனி இவர்கள் எவ்வாறெல்லாம் வெயிலுடன் வீம்பாக விளையாடுகிறார்கள் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு: (அவ்வ்வ்வ்வ்.. இஸ்கோல் ஞாபகம்..)

* எப்படா ஜனவரி முடிஞ்சி பிப்ரவரி ஆரம்பிக்கும்.. இந்த டயலாக்கை சொல்லலாம்'னுட்டே ஊருக்குள்ள ரொம்ப பயலுக சுத்தீட்டுருப்பானுங்க
"ஸ்ஸ்ஸ்..ஸப்பா.. இப்பவே வெய்யில் இந்த கொளுத்து கொளுத்துதே.. இன்னும் ஏப்ரல்..மே'லயல்லாம் வெளீல நடமாட முடியாது போலருக்கே?!" 
 (ஊட்டுக்குள்ளயே ஒக்காந்துக்க.. நாங்களா வேணாமின்னோம்?!)

*ஏப்ரல்..மே முடிஞ்சும் இவனுங்க அடங்குவானுங்களான்னு பாத்தா..அதான் இல்ல.. அடுத்த டயலாக்கை ரெடியா வெச்சிருப்பானுங்க-
"யே..யப்பா.. மே மாசம் முடிஞ்சும் வெய்யிலு இந்தப் போடு போடுது?!"
 (இந்த மாரி ஆளுங்ககிட்ட  மாட்டும்போது, அவசரமா கக்கா போறாப்ல மூஞ்சிய வச்சிக்கிட்டு சட்டுன்னு எடத்த காலி பண்ணிடனும்..)

* மேற்படி ரெண்டு டயலாக்கையும் கரெக்ட்டா அக்னி நட்சத்திரத்துக்கு முன்னயும், பின்னயும் தப்பாம சொல்ற பிரகஸ்பதிகளும் இருக்காங்க.. 
(இப்படித்தான் "இந்த தடவ அக்கினி நட்சத்திரம் ரொம்ப கொடுமையா இருக்கே?!"ன்னு சொன்ன ஒரு பெரிசுகிட்ட "ஏங்க..அது நல்லபடம் தானே?! மணிரத்னம் அட்டகாசமா எடுத்திருப்பாப்ல"ன்னேன்!   கெட்ட வார்த்தைல திட்டிருச்சி!அவ்வ்வ்வ்!!)

*அடுத்து.. இந்த உலகத்துல சூரியன் எப்போ உதிச்சிச்சோ அப்போத்திலேர்ந்து தவறாம நாம கேக்கற ஒரு தேஞ்சு போன திருட்டு சிடி டயலாக்- 
"போன வருசத்தோட இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம்'ல்ல?! (டொமேட்டோ...எல்லா வருசமும் இதையேத்தாண்டா சொல்றீங்க..)
 
*அப்புறம்.. நம்மாளுங்களோட அல்டிமேட் வாக்கியம் - 
"எவ்ளோ மழையடிச்சாலும் தாங்கிக்கலாம்.. இந்த வெய்யிலை மட்டும் தாங்க முடியறதில்ல.."
 (இதையே மழை/குளிர் காலத்துல அப்படியே மாத்தி சொல்லுவானுங்க பாருங்க..அப்போ வர்றதுதான் ரியல் கொலவெறி..)

*இந்த வெய்யிலுக்கு மோர், எளனின்னு குடிக்கறதுதான் ஒடம்புக்கு ரொம்ப நல்லது"  -இப்படி அறிவுரை சொல்றது தப்பில்ல.. ஆனா அதே அட்வைஸ் அய்யாச்சாமிங்கதான் மட்டமத்தியான கத்தரி வெயில்'ல "மாஸ்ட்டர்.. சூஊஊஊடா ஒரு டீ"ன்னு சேட்டன் போட்டுத்தர்ற வெந்நீரை குடிச்சி வெறியேத்தீட்டுருப்பானுங்க..
 (அட மல்டிபிள் பர்சனாலிட்டி மண்டையனுங்களா..)

* "இப்பலாம் ஹாட் சாப்டறத விட்டுட்டேன் மச்சி! சம்மர் முடியற வரைக்கும் பீர்தான்!!"

-வெரி கப்பி ஃபெல்லோஸ்.. இவனுங்க குடி எஸ்டீடி'யை கொஞ்சம் ஆராஞ்சி பாத்தா வாரம் ஒருக்கா  ஒரு கோட்டர் மட்டும் சாப்ட்டுட்டுருந்தவன் வெயிலை சாக்கா வெச்சி டெயிலி ரெண்டு பீர் சாத்திட்டுருப்பான்.
(இவனுங்க மேலயெல்லாம் மருத்துவர் மாலடிமை ஐயாவை ஏவி விட்டாத்தான் என்ன?!)

*"அடிக்குற வெயிலுக்கு டெயிலி ரெண்டு டைம் குளிச்சாத்தான் சார் கொஞ்சமாச்சும் சமாளிக்க முடியுது.." 
 -அப்டியே சீனை கட் பண்ணி சாரோட வீட்ல ஒப்பன் பண்ணா, 
"என் வீட்டுக்காரரு ரொம்ப சிக்கனம்! வெய்ய காலத்துல தண்ணிப் பஞ்சம் வேறயா?! ரெண்டு நாளைக்கு ஒரு தபாதான் குளிப்பாருங்க.."

*கடைசியா நம்ம வெயில் கவுஞ்சர்கள்... மழையை வெச்சி இவனுங்க எழுதற கவிதை   டார்ச்சர் தாங்காமத்தான் இப்பல்லாம் மழையே வர்றதில்ல.. ஆனாலும் அடங்குறாய்ங்களா?! அதான் இல்ல.. வெயில் குடித்த ரௌத்திரம்..ரெக்கை முளைத்த வெக்கை'ன்னு புதுசு புதுசா கெளம்பி வந்து சலம்புவாய்ங்க நம்ம சீசனல் கவுஞ்சர்கள்! (நீங்கல்லாம் செத்தா ஸ்ட்ரெயிட்டா கொதிக்குற எண்ணெய் சட்டிதான் மக்கா)
 
டிஸ்க்கி: சரி இதையல்லாம் ஏண்டா வெயில் காலம் முடிஞ்சி வந்து சொல்றேன்னு கேக்குறீங்களா?!  அடிக்குற வெயிலுல மக்கழே'வுக்கு இருக்க கடுப்பை நமீதா இடுப்பளவுக்கு இரட்டிப்பாக்க வேணாங்குற ஒரு நல்லெண்ணெய்தான்!!
 
ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்
:-)))

Wednesday, May 15, 2013

மெகா டிவிட்டப்பும் தலதளபதியும் !


                 இந்த வருட கீச்சர்களின் சந்திப்பு மே 12 கோவை மாநகரில் நடந்தது. வழக்கம் போல நமக்கு எப்ப நிறைய வேலை இருக்கோ அன்னிக்கே வெச்சிருந்தாங்க. ( உனக்கு என்னடா வேலைங்குறிங்களா.. அவ்வ் ) .  போவலாமா.. வேணாமானு கடைசி வரை குழப்பமாவே இருந்துச்சு. குப்புற படுத்து தலையணையை பிய்த்து கொண்டிருந்த சமயத்தில் போன் செய்த பிரபல டிவிட்டர் ஒருவர்  " தல, உங்கள பாக்க தான் கோவையே வரோம், கண்டிப்பா வந்துருங்க" என்றார். எனக்கு அப்படியே நடுராத்திரி கொசு கடில படுத்துருக்கறப்போ திடீர்னு கரன்டு வந்த மாதிரி ஆகிருச்சு.உடனே மூட்டைய கட்டிகினு கெளம்பிட்டேன்.


மெகா டிவிட்டப்பில் - 1



     சமீப கால தமிழ் பட ஹீரோக்களின் இன்ட்ரோ சீன் போல நைனா காறி துப்ப, மம்மி டாட்டா  காட்ட கோவை நோக்கி ஆரம்பமானது என் பயணம்.நைனாவோட சாபத்துல ஒரு பஸ்சு கூட கிடைக்கல. கேட்டா 144 தடை உத்தரவாம்.மருத்துவரய்யாவ திட்டி நாலு ஸ்டேடஸ் போட்டுட்டு, ஒரு காய்கறி லாரிய புடிச்சு தஞ்சாவூரு வந்து சேர்ந்தேன். அங்கே உள்ள சக டிவிட்டர்களுடன் சேர்ந்து கோவை பஸ்சுல ஏறினேன்.

   விடியற்காலை டிவிட்டப்பு நடக்கும் ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். ரிசப்சனிஸ்ட் நல்லா கொறட்ட விட்டு தூங்கினு இருந்தான். பெரிய ஓட்டலாச்சே  கொஞ்சம் கெத்து காமிப்போம்னு ' ஹே.. வேக் அப் யா"  என்றேன். எந்திரிச்சு பேந்த பேந்த முழிச்சான் , அப்பவே நான் உசார் ஆகிருக்கனும்.  

" ரூமு வேணும்யா.. "

" சார்,  ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு ஆவும் சார் "

" ஙே.. என் ரூமோட மூனு மாச வாடகைய்யா அது .... சரி.. கிறுகிறு வருது காப்பி சொல்லுயா "

"காபி ஐம்பது ரூவா சார் "

அடுத்து பத்து செகன்டில் பக்கத்து ஓட்டலின் ரிசப்சனில் இருந்தேன்.


              ஒரு வழியா தூங்கி எந்திரிச்சு குளிச்சு முடிச்சு குடிச்சு ( டீ தான்யா  ) மூணு மணி டிவிட்டப்புக்காக இரண்டு மணிக்கே போய் உக்கார்ந்தோம். காபி ,டீ எதுனா குடுப்பாங்களானு கேட்டதுக்கு பரிசலார் மேலயும் கீழயும் பாத்தாரு. சிரிச்சு வெச்சுட்டு திரும்பவும் சீட்ல போய் உக்காந்தேன்.கனலு மட்டும்  கடசீல செல்போன மறச்சு வெச்சு டிவிட் பண்ணிட்டு இருந்தான், ஏன்னு தெர்ல. சென்னியார ரிசப்சனிஸ்ட பொண்ணு கிட்டேர்ந்து பிரிச்சு ஹாலுக்கு கொண்டு வர பதினொரு பேர் கொண்ட குழு முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க.


          ஒருவழியா டிவிட்டப்பு இனிதே ஆரம்பமாச்சு. பரிசல் தொகுத்து வழங்கினார். பரிசல், கார்க்கி டைமிங் ஜோக்குகளால் அரங்கம் அதிர்ந்தது. ராஜன் வழக்கம் போல செம கலாய், ஆனா கொஞ்சம் சீரியசாவும் பேசினார் சிறை அனுபவங்களை.  இந்த தடவை கவிதை கருப்பையா கவுஜை வாசிக்கமாட்டார் என பரிசல் அறிவிக்க, மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.ஒரு வழியா காபி வந்து சேர்ந்துச்சு.அப்படி இப்படினு ஒரு எழு மணிக்கு டிவிட்டப்பு இனிதே முடிந்தது.

           அடுத்து நான்கவது மாடியில் டின்னர் என பரிசல் அறிவிக்க, லிப்டுக்கு கூட வெயிட் செய்யாமல் படியில் ஏறி ஓடீனோம். நான் , காலி பிளவர், அப்புறம் கப்ல ஏதோ கொடுத்தாங்க. அத டேஸ்ட் பண்ணிட்டு "தயிர் சூப்பர்ணே" என்றேன் ஷேக்கிடம். 'அடேய், அது சூப்புடா " என வழக்கம் போல ஆயிரம் வால்ட் பல்பு வாங்கினேன். கடைசியா ஐஸ்கீரீம் தந்தார்கள். அதை ரெண்டு தடவை வாங்கி கையும் களவுமாக மாட்டினார் சைல்ட் சின்னா.  சர்வரை டிவிட்லாங்கர் போட்டுவிடுவேன் என அவர் மிரட்ட, பதிலுக்கு சர்வர் துப்பியதை நான் இங்கு கூற விரும்பவில்லை.


மெகா டிவிட்டப்பில் - 2



          எல்லாருக்கும் டாட்டா காட்டிகினு ஊருக்கு கெளம்பினோம். நெடுநாள் நண்பர்கள் ஷேக் மற்றும் ஜெகன் ஆகியோரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அடுத்த டிவிட்டப்புக்காக காத்துக்கொண்டிருக்குறேன்..


- தலதளபதி - @Prabu_B .

Sunday, April 14, 2013

தன்மைக்கு மரம் இரை!

  

   பங்குனி மாதத்தின் இருபத்தேழாம் நாள் மாலையில் இதை எழுதுகிறேன்.“ப்பா, போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி”. ஒவ்வொரு ஏப்ரல் மேயும் இதே வாக்கியத்தைத்தான் தாங்கிக்கொள்கின்றன! எண்ணெய் முடிந்த விளக்கு அனைந்து போவதைப்போல் ஹீலியமும், ஹைட்ரஜனும் குறையக் குறைய சூரியன் நம்மை நெருங்கிக்
கொண்டுதான் இருப்பான்! வெயிலும் அதிகமாகித்தான் போகும்!

  சோம்பல் கூடிப்போன நம் ரத்தம், பக்கத்துத் தெரு மளிகைக்கடை  செல்லவும், ஊளச்சதைக்குறைக்க உடற்பயிற்சி நிலையம் செல்லவும்கூட மகிழுந்தையும்(Car), இருசக்கர வாகனத்தையும் நாடுவதின் மீதான எள்ளலை பதிவு செய்வதை விட, அந்த வாகனப்புகையில் உள்ள கரியமில வாயு இப்பூமிக்கிழைக்கும் அரும்பெறும் தீமையை அறிந்தும் அதையே செய்வோரை என்ன சொல்லி எள்ளல் செய்ய?!

   அன்றாட வாழ்வின் இன்றியமையா பொருளாகிப்போன குளிர் பதனப்பெட்டி வெளியிடும் chloro fluro carbon (cfc) பூமிக்கிழைக்கும் தீமையை நம்மில் எத்தனைப்பேர் அறிந்திருப்போம்?!

    கரியமில வாயு கலந்த குப்பைக்காற்று வானத்து தகடுகளுள், சூரியன் வெளியிடும் புறஊதாக் கதிர்களை(Ultra-Violet Rays)  நம் தோல்மேல் படாமல் வடிகட்டும் மிகமுக்கிய தகடான ஓசோன் தகட்டிலேயே ஓட்டைவிழ நாமே காரணமாகிப்போவதன் முடிவு Rickets, Skin cancer போன்ற தோல் நோய்களை நமக்குத் தருவதைத்தான் அன்றே ந்யூட்டன் சொன்னான் போலும் Every Action has an Equal and opposite Reaction என!

 இந்த கரியமில வாயுவைத்தான் மரங்கள் தங்களின் ஜீவ வாயுவாய் கொண்டிருக்கின்றன, நமக்கு பிரான வாயு போல! விளை நிலம் வீட்டு மனையாவது, எப்படி நம் விவசாயத்தை பாதிக்குமோ; அதேபோல் மரங்களை அழிப்பது நம் உயிர் நிலையை அழிக்கவல்லதென, நாம்
ஏன் அறிந்திருக்கவில்லை!

  ஓ! அறிந்திருக்கிறோம்(?)! அதனால் தான் வீட்டின் முகப்புக்கும் சுவற்று
வர்ணத்துக்கும் ஒத்தாற்போல் நிழலில் வாழும் செடிகளையும், சிறகொடிந்த போன்சாய் மரங்களையும் தொட்டியில் போட்டு வளர்க்கிறோம் இல்லையா?!

 எத்தனையோ அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் ஆனதென போகும் வழியில் மரத்தை நட்டு வைப்பதும், அதனை ஆடும் மாடும் இரையாக்கிக் கொள்வதும் நாமறிந்தவைதான் இல்லையா?!

  என் இனிய ப்ளாட் வாசிகளே! “காரும்” , “இரு சக்கர வாகனமும்” நிறுத்திவைக்க இடம் கொண்டிருக்கும் நம் ப்ளாட்களின் அடித்தளங்கள்தான் ஒரு மரத்துக்கு இடம் தருவதில்லை!

  வீட்டு முகப்பின் அலங்கார விளக்குக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தெருவோர மரத்தை வெட்டுவதிலும்,



  சருகை சுத்தம் செய்ய சோம்பல் கொண்டு அடுத்த வீட்டு மரத்தை வெட்டச்சொல்லி சண்டையிடுவதிலும், தன் வீட்டு மரத்தை வெட்டுவதிலும் அவர்களின் பூமி மீதான பசுமைப் பாசத்தை(?) விளக்குவதாகத்தான் உள்ளது!

  விடுமுறைக்கென ஆயிரம் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைப்போல
தோட்டக்கலையையும் பிள்ளைகளுக்கு பழக்கிவிடலாம் இல்லையா?! இவ்ளோ சொல்றியே “நீ”என்பது உங்கள் கேள்வியாய் இருப்பின், வீதி தொடங்கி வீட்டின் முடிவு வரை மண்ணே அல்லாத சிமெண்ட், தரையை கொண்ட என் பழைய வீட்டில் கிடைத்த இடத்தில் எல்லாம் நான் நட்ட மரங்களை சருகுக்கு எரிச்சல் பட்டுக்கொண்ட வெட்டச் சொன்ன அண்டை
வீட்டார் நானில்லாத பொழுதுகளில் கனியை களவாடி உண்ணத்தான் செய்தார்கள்! இன்று நான் வாழும் வீட்டிலும் என் இளம் ப்ராயத்தில், பாட்டி சொல்லி நான் விதைத்த மா, நெல்லி, மரங்களோடு நானாக விதைத்த வேப்பமரமும் தன் வேர் சேமித்த நீரை தான் அழிந்தாலும் என் மகளுக்கு நிலத்தடி நீராய் விட்டுச்செல்லத்தான் செய்யும்! மரம் நன்றியுள்ளது!

 காருக்கு ஒதுக்கியதைப்போல் “கார்மேகத்துக்கு” விதையாகும் மரத்துக்கும் இடம் ‘நான்’ கொடுத்துவிட்டேன்! நீங்கள்?

-மீறு - @Narumugai_

Friday, April 5, 2013

வங்கி சேவை - சில தகவல்கள் !



நண்பர்களே,
               ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் பலர் வங்கி சேவை சம்மந்தமாக பல கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளனர். அவர்கள் பதில் அளிக்கும் போது எனக்கு உண்டான சில ஐயங்கள்....பலர் நல்ல துறைகளில் வேலை பார்த்தாலும் அடிப்படையான வங்கி கொள்கைகளை பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான். வங்கியில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளையும் வங்கிசேவை பற்றியும் எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
  
  வங்கி கணக்குகள் இருவகை
1)           சேமிப்பு கணக்கு (Savings account)
2)           வியாபார கணக்கு(current Account)

     சேமிப்பு கணக்கு என்பது  தனிநபர் பெயரில் தொடங்கும் கணக்கு. இதை தனிநபரகாவும் உங்கள் குடும்ப உறுப்பினருடன் கூட்டு கணக்ககாவும்(Joint Accout) பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர் மட்டுமே இதில் இணைக்க முடியும். மாற்றாக கோவில் டிரஸ்ட் மற்றும் கோவில் விழாக்கள் குழு போன்ற ஓரு விஷயத்திற்கு மட்டும் வேறு நபர்களை இணைக்க முடியும் (அதற்காக தனியாக சில படிவங்களில் கையெழுத்து வாங்கப்படும்)
கூட்டு கணக்கு ஆரம்பிக்க அதிக பட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கபடும் அதில் மூன்று வகை உள்ளது.

1)      E or S (Either or survivor)
கூட்டு கணக்கில் உள்ள எவரேனும் ஒருவர் நினைத்தாலும் தனியாக பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி உண்டு)

2)      Jointy by All
இரண்டு பேர் சேர்ந்து கையெழுத்து இட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி இல்லை)

3)      Any Two
மூன்று பேர் சேர்ந்து கணக்கு தொடங்கினால் யாராவது இருவர் கையெழுத்து இட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி இல்லை)

இந்த வகை சேமிப்பு கணக்குகளில் இருக்கும் உங்கள் பணத்திற்கு தினமும் 4% வட்டி வழங்கபடும் என்பது RBI உத்தரவு.

  வியாபார கணக்கு என்பது கடைகளின் பெயரில் வர்த்தக நிறுவங்களின் பெயரில் தொடங்கப்படும் கணக்கு உதாரணமாக கருப்பையா ஹார்டுவேர்ஸ்” என தொடங்கபடுவது. இந்த வகை கணக்குகளில் பாட்னர்ஷிப் தொடங்கப்படும். ஒருவர் மட்டுமே ஓனர் எனில் ATM கார்டு வசதி கொடுக்கப்படும். இந்த வகை கணக்குகளில் லட்ச ருபாய் இருந்தாலும் அதற்கு என எந்தவித வட்டியும் அளிக்கப்படாது.

        மினிமம் பேலன்ஸ் மற்றும் அவேரேஜ் பேலன்ஸ் (1000 ரூபாய் பேலன்ஸ் அக்கௌன்ட் என வைத்துக்கொள்ளுங்கள்).ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு மாதிரியான பேலன்ஸ் Schemeகள் உள்ளன. மினிமம் பேலன்ஸ் என்பது 1000ரூ ஓரு ருபாய் குறைந்து 999ரூ வந்தாலும் அந்த மாதத்திற்க்கான Non Maintance Balnce சார்ஜ் எடுக்கப்படும். ஓரு மாதத்திற்க்கு ஒருமுறை மட்டுமே எடுக்கப்படும். ஓரு தடவை எடுத்த விட்டால் மீண்டும் அந்த மாதத்தில் எத்தனை முறை 1000க்கு கீழ்வந்தாலும் பணம் எடுக்கப் பட மாட்டது. மீறி எடுத்தால் தைரியம்மாக சண்டை போடலாம்( பலர் இதை கவனிக்காமல் விட்டுவிடுவதால் வங்கிகளுக்கே லாபம்)

    அவேரேஜ் பேலன்ஸ் என்பது உங்கள் கணக்கில் இருந்த பணத்தில் சராசரி 1000 ரூ வந்தால் போதும். இது பலருக்கு சரியாக புரியாது தெளிவாக விளக்குகிறேன். நீங்கள் வைத்திருக்கும் அக்கௌன்டில் அவேரேஜ் பேலன்ஸ் 1000ரூ எனில் வங்கியின் கணக்குப்படி ஒவ்வொரு இரவும் 12 மணிக்கு உங்கள் அக்கௌன்டில் இருக்கும் பணத்தை கணக்கிடுவார்கள். இப்படி மாதத்தில் உள்ள 30 நாட்களும் கணக்கிடப்படும் அதன் சராசரி 1000 இருந்தால் உங்களுக்கு எந்த வித சார்ஜும் எடுக்கப் படாது இல்லையெனில் சார்ஜ் எடுக்கபடும்.

Example :

April 1 your Account Balance is    -   30000 (Night 12’0clock)
April 2 you withdraw all money    -         0     (        ‘’                 )
.
.(பணம் எதுவும் போடவேஇல்லை )
.
.
Till april 30 its                                  -         0
  
இப்பொழுது உங்கள் அக்கௌண்டில் மொத்த பண அளவு 30000ரூ மாதத்தின் நாட்கள் 30  சராசரி 30000/30 =1000 ரூ (No Charge)

இதுவே மார்ச் மாதம் என எடுத்து கொண்டால் 31 நாட்கள் ஆகிவிடும் அப்பொழுது 30000/31=967.11 (கண்டிப்பாக சார்ஜ் எடுக்கப்படும்) இவ்ளோ தாங்க அவேரேஜ் பெலேன்ஸ் கான்செப்ட்.

Salary Account வைத்து இருபவர்களுக்கு எந்த வித பேலன்சும் தேவையில்லை.



ATM CARD-

1)      நீங்கள் அக்கௌன்ட் வைத்திருக்கும் வங்கியின் ATM-இல் உங்கள் கார்டை மாததிற்கு எத்தனை முறை வேணாலும் உபயோகிக்கலாம், மற்ற வங்கியின் ATM-இல் மாதத்திற்கு 5 முறை மட்டுமே உபயோகிக்க முடியும். அதன் பின் சார்ஜ் செய்யப்படும்.

2)      நீங்கள் பணம் எடுக்கும் போது பணம் வராமல் உங்கள் அக்கௌன்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யபட்டால் கவலைபட வேண்டாம் உங்கள் பணம் கண்டிப்பாக வெளியே வராது. சரியாக 24 மணி நேரத்தில் மீண்டும் உங்கள் கணக்குக்கே வந்து சேரும். அப்படியும் வரவில்லை எனில் நீங்கள் உங்கள் வங்கியை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும் மாற்றாக பணம் எடுத்த ATMக்கு சொந்தமான வங்கியில் கேட்க வேண்டாம்.

3)      ஓரு சில வங்கியின் ATM களில் ATM கார்டு உள்ளே சென்று தங்களின் தேவைகள் முடிந்த பின் தான் வெளியே வரும். சில சமயங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டு வராமல் இருக்கும், அந்த மாதிரி நேரங்களில் அந்த ATMக்கு சொந்தமான வங்கியில் சென்று நீங்கள் முறையிடலாம். அவர்கள் தர மறுத்தால் உடனே ஓரு பேப்பரில் தர முடியாது என எழுதி தர சொல்லுங்கள். அவரே வந்து எடுத்து தருவார்.

4)      ATM பாஸ்வேர்ட் தவறாக மூன்று முறை உபயோகித்தால் உங்கள் ATM லாக் செய்ய படும் மீண்டும் முயற்சிக்காமல் 24 மணி நேரம் கழித்து உபயோகிக்கவும், அப்படியும் வரவில்லை என்றால் ஓரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் Idendity Proff உடன் உங்கள் வாங்கியை நாடி INSTA PIN பெற்றுக் கொள்ளவும்.

5)      ATM கார்டு கவரில் பாஸ்வேர்ட் எழுதி வைப்பதை தவிர்க்கவும்

CHEQUE :

1)      உங்களுக்கு ஒருவர் உங்கள் பெயரில் செக் கொடுத்து இருக்கிறார் எனில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது அது அக்கௌன்ட் பே செக்கா இல்லை Direct withdraw செக்கா என்பது தான் செக்கின் மேலே இடதுபக்கம் இரண்டு கோடுகள் (//) கீச்சி இருந்தால் அது அக்கௌன்ட் பே செக். இந்த மாதிரி செக்கை நீங்கள் உங்களுக்கு சொந்தமான அக்கௌன்ட் உள்ள வங்கியில் Collection போட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு ஓர் நாள் கால அவகாசம் எடுக்கும். ஒருவேளை செக் தந்தவரின் அக்கௌன்ட் உள்ள  வங்கியிலே உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தால் ஓரு சில நிமிடகளில் பணம் எடுத்து கொள்ளலாம்.

2)      Direct withdraw என்பது உங்களுக்கு அக்கௌன்ட் எதுவும் தேவை இல்லை செக் கொடுத்தவரின் வங்கிக்கு நேரடியாக சென்று நீங்களே பணம் எடுத்துக் கொள்ளலாம் இல்லையெனில் முன்பு சொன்னது போல் உங்கள் அக்கௌண்டில் collection செய்து கொள்ளலாம். உங்களால் செல்ல முடியவில்லை எனில் உங்கள் நண்பரிடமும் கொடுத்து விடலாம். (செக்கில் “BERAER” என்ற வார்த்தை இருக்கும் அப்படி இருந்தால் யார் பெயரில் இருந்தாலும் யார் வேணாலும் எடுத்துக் கொள்ளலாம்).

3)      Direct Withdraw செக்கை நீங்கள் தவறவிட்டால் அதை யார் வேணாலும் வங்கியில் சென்று பணம் எடுக்கலாம். அதற்கு வங்கி பொறுப்பாகாது. இந்நேரங்களில் உடனே வங்கியை தொடர்புக் கொண்டு “STOP PAYMENT” என்னும் சேவையில் செக்கை ரத்து செய்ய வேண்டும்(அக்கௌன்ட் உரிமையாளர் மட்டும் ரத்து செய்ய முடியும்).

4)      வரும் ஏப்ரல்1 முதல் CTS என்னும் புதிய செக்குகள் மட்டும் பயன் படுத்த இயலும் உங்களிடம் இருக்கும் செக் CTS என்பதை அறிந்து கொள்ள செக்கின் இடது பக்கம் பக்கவாட்டில் CTS என டைப் செய்ய பட்டு இருக்கும்.

5)      நீங்கள் Collection போட்ட செக்கில் பணம் இல்லை என திரும்ப வந்துவிட்டால் அதனுடன் ஓரு பேப்பர் வைத்து கொடுப்பார்கள். அதில் ரிஜெக்ட் செய்த காரணம் எழுதி இருக்கும் அதை வைத்து கொண்டு :Negotiable Instrument Act-ல் நீங்கள் அவர் மீது வழக்கு தொடரலாம்.

6)      செக்கில் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து சரியாக மூன்று மாதம் வரை மட்டுமே அந்த செக் செல்லுபடியாகும்.

7)      செக்கில் தவறாக எழுதி வெட்டி திருத்தி எழுதினால் அத பக்கத்தில் உரிமையாளரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.

8)      செக்கில் பணமதிப்பு RS.200000 என எழுதிவிட்டு வார்த்தையில் “Two thousand only” என எழுதி இருந்தால் இருபது ஆயிரம் மட்டும் கொடுக்க இயலும்  .


NEFT-RTGS METHOD

1)      செக் உபயோகங்களை குறைக்க RBI கொண்டு வந்த முறை. இதன் மூலம் இந்தியா முழுவதும் எந்த வங்கியில் இருந்தும் எந்த வங்கிக்கும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

2)      NEFT-NATIONAL ELECTRONIC FUND TRANSFER இதன் மூலம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு குறைவாக உள்ள  TRANSFER களை செய்யலாம்.

3)      RTGS-REAL TIME GROSS SETTLEMENT - இரண்டு லட்சத்திற்கு அதிகமானஉள்ள  TRANSFER களை செய்யலாம்.

4)      இந்த சேவையை செய்ய உங்களுக்கு அக்கௌன்ட் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

5)      உங்கள் நண்பர் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்ப வேண்டும் எனில் நண்பர்க்கு அக்கௌன்ட் உள்ள வங்கியில் வரிசையில் நின்று நேரத்தை செலவிட வேண்டாம். உங்களுக்கு அக்கௌன்ட் உள்ள வங்கியில் பணத்தை போட்டு NEFT OR RTGS செல்லான் வாங்கி அதில் எழுதி கொடுத்தால் போதும். இதற்கு உங்கள் செக் அவசியம் தேவைபடும். உங்கள் செக்கில் நண்பருக்கு செலுத்த வேண்டிய பண மதிப்பை எழுதி “NEFT OR RTGS to -----------------(நண்பரின் பெயர்) எழுதி கொடுத்தால் போதும்.

6)      இதற்கு தேவையானவைகள் உங்கள் நண்பரின் பெயர், அக்கௌன்ட் நம்பர், வங்கியின் பெயர், வங்கியின் கிளை இடம் மற்றும் அந்த கிளைக்கான “IFSC CODE”

7)      IFSC CODE என்பது ஒவ்வொரு வங்கிக்கும் RBI அளித்திருக்கும் கோடு. இந்த மாதிரி கோடுகள் எல்லாம் எல்லா வங்கியிலும் இருக்கும்.

8)      நீங்கள் உங்கள் நண்பரின் அக்கௌன்ட் நம்பரை தவறாக கொடுத்து விட்டால். நீங்கள் அனுப்பிய பணம் மீண்டும் உங்கள் அக்கௌன்ட்கே திரும்பி வந்துவிடும். வேறு எந்த அக்கௌன்ட்கும் போய் சேராது. எந்த வித அச்சமும் இல்லாமல் இந்த சேவையை உபயோகிக்கலாம்.

9)      ஓரு முறை Transfer செய்ய ஆகும் செலவு வெறும் ரூ 2.50 தான். இந்த சேவையை பயன்படுத்தி நேர செலவை குறைக்கலாம்.

பொதுவான விஷயங்கள்

1)      எந்த அக்கௌன்ட்டிலும் RS.50000 மேல் போட அக்கௌன்ட் உரிமையாளர் PAN நம்பர் அவசியம். (RBI RULE).

2)      அக்கௌன்ட் தொடங்கும் சமயத்தில் PAN நம்பர் கொடுத்து தொடங்கினால் அவசியம் இல்லை.

3)      வங்கியில் எந்த சேவை தொடங்கினாலும் கண்டிப்பாக “Nominee” பதிவு செய்து கொள்ளுங்கள்.

4)      மூன்று வருடங்களுக்கு ஓரு முறை உங்கள் அக்கௌண்டில் உங்கள் புகைபடம் புதுப்பித்து கொள்ளவும்.

5)      வீட்டின் விலாசம் மாற்றபட்டால் புதிய விலாசத்திற்கு உரிய ஆவணங்கள் தேவை.

6)      வங்கியில் எந்த தேவை ஏற்பட்டாலும் அதற்கான அடையாள அட்டையை வாங்கி கொள்ளுங்கள்( acknowledgement card).

7)      உங்கள் அக்கௌன்ட் மூன்று வருடங்களாக Operate செய்யவில்லை எனில் அக்கௌன்ட் DORMANT செய்யப்படும். மீண்டும் நீங்கள் உங்கள் புகைப்படம் மற்றும் புதிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின் தான் இயக்க இயலும்.





அக்கௌன்ட் தொடங்க தேவையான ஆவணங்கள்:

1)      Passport Size photo
2)      Identtiy Proff
3)      Address Proff

இந்த மூன்றும் இருந்தால் போதும் முன்பு போல் “Reference” எதுவும் தேவையில்லை.

Identtiy Proffs
1)      Passport
2)      Pan card
3)      Driving License
4)      Voters Id
5)      Employee Id card
6)      Degree Certificates With Photo
7)      Vehicle RC Copy with Photo
8)      Ration Card (only for photo person)
9)      Credit card with photo
10)   Other Bank Pass Books with photo and bank seal and sign
11)   All Government Issued proffs with photo
Address Proffs
1)      Passport
2)      Driving License
3)      Voters id (only for Rural Branches)
4)      Letter from employer
5)      Phone bill (latest 3 months copy)
6)      Electricity bill(latest 3 months copy)
7)      Gas Bill (latest 3 months copy)
8)      Life Insurance copy( Valid)
9)      Ration Card( Name required)
10)   Credit Card Statements
11)   All Bank Passbook with recent six months entry
12)   RC book



அடுத்த பதிவில் லோன் தொடர்பான மற்றும் FIXED DEPOSIT பற்றிய பதிவுகளை எழுதுகிறேன்.

நன்றி,

K.S.Vinoth Krishnan
Dhanlaxmi Bank
Nagercoil
Twitter ID @ROFLMAXX
Vinothkrishnan21@gmail.com