Thursday, February 28, 2013

வாடிவாசல் -ஒரு வாசிப்பனுபவம்!

சமீப காலமாய்- சரியாகச் சொல்லப்போனால் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனபின் மனைவியுடன் மொபைலில் கடலை போட ஆரம்பித்ததிலிருந்து புத்தகங்களுக்கும், எனக்குமான பிணைப்புச் சங்கிலியில் எங்கோ ஒரு கண்ணி விடுபட்டது மாதிரியாதொரு கானல்தோற்றம்.  இவ்வருடம் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் இரண்டு தவணையாய் வீட்டிற்குக் கொண்டுபோய் பதவிசாய் அலமாரியில் அடுக்கியும் வைத்தாயிற்று. இந்த பாழாய் போன படிப்பூக்கம்(?!!) மட்டும் திரும்ப வந்தபாடில்லை. சரி..வராத படிப்பை வா..வா.வென மல்லுக்கட்டினால் மூளைக் காய்ச்சல் வந்துவிடும் அபாயமிருப்பதால் நானும் வரும்போது வரட்டுமென இலவசமாய் விட்டு விட்டேன். 
 
சுண்டல் மடித்த காகிதம் முதற்கொண்டு பேருந்து நிலைய நவீன பொதுக்கழிப்பிடக்கதவு கில்மா தத்துவங்கள் வரை வகைதொகையில்லாமல் படித்துக் திரிந்து கொண்டிருந்த என் போன்றதொரு புத்தகப்பூச்சிக்கு இதைப்போலதொரு நிலைமை வந்தது பெருங்கொடுமை.
 
இம்முறை ஊரிலிருந்து கிளம்புகையில் எதற்கும் இருக்கட்டுமென்று இருப்பதிலேயே தனுஷ்தனமான இரண்டு புத்தகங்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டேன். அந்த இரண்டு- சி.சு. செல்லப்பா'வின் வாடிவாசல், சுஜாதாவின் நீர்க்குமிழிகள்.
 
உறங்கப் பிடிக்காத ஒரு முன்னிரவில், ஒரு புத்தகத்தை ரேண்டமாக விரித்து ஒன்றிரண்டு பக்கங்கள் படிக்கும்  எனது தொன்றுதொட்ட வழக்கத்தின் படி- வாடிவாசலை படிக்க ஆரம்பித்தவன் பாதியிலிருந்து முழுக்கதையையும் முடித்தபின்..  திரும்ப ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து முழுக்க முடித்தேன்!


மேற்சொன்ன இரண்டு பத்திகளும் வாடிவாசல் என்கிற குறுநாவலை நான் வாசிக்க நேர்ந்ததற்கான முன்கதை சுருக்கம். இனி ஓவர் டூ வாடிவாசல்...
 

அதிகபட்சம் அறுபது பக்கங்களுடையதொரு குறுநாவலில்- ஒரு ஜல்லிக்கட்டு,  அதனூடாக வெளிப்படும் ஜீவ..மரண போராட்டங்கள், பழிவாங்கல்கள், குழி பறிப்புகள், அந்தஸ்து ஜபர்தஸ்துகள், காளைகள் குறித்த/காளைபிடி வீரர்கள் குறித்த நுட்ப விவரணைகள்.. இவையனைத்தையும் அசலான வட்டார மொழி வார்த்தைகளை வைத்து ஜல்லிக்கட்டு ஆடியிருக்கிறார் சி.சு. செல்லப்பா. நாவல் முழுதும் காளை பிடிப்பதை குறித்த "மாடு அணைதல்" என்கிற வட்டார பிரயோகமே நம்மை மயக்கி, காளை அணையும் காட்சிகளை கண்முன்னே ஓடவிடுகிறது.
 
பொதுவாக சொல்லப்படும்.. மெதுவாக ஆரம்பிக்கும் கதை பின் படிப்படியாக சூடு பிடித்து உச்சத்தை அடைகிறது என்கிற கதையெல்லாம் இக்கதையில் கிடையாது. எடுத்த எடுப்பில் முதல் எழுத்திலிருந்தே கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

கிழக்கத்தி சீமையிலிருந்து மாடணையவரும் பிச்சி, அவன் மச்சினன் மருதன், ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் ஒரு உள்ளூர் பெயரிலாக் கிழவனார், ஜமீன்தார், பிச்சியின் இறந்துபோன தகப்பனார் -என நாவலில் மொத்தம் ஐந்தே பிரதான பாத்திரங்கள்தாம். எனினும் பெரும் ஜனத்திரள் குழுமியிருக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தின் ஓயாத இரைச்சல் நாவலை முடித்து வெகுநேரத்திற்கு பின்னரும் காதுகளில் ஒலித்துக்கொண்டியிருக்கிறது. வெறும் ஐந்து பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு இதை  வாசகனுக்கு உணரவைத்திருக்கும் சி.சு. செல்லப்பாவை சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.
 
காற்றிலாடும் கிலுகிலுப்பை போல் ஓயாமல் சப்தமிட்டுக்கொண்டேயிருக்கும் பாட்டையாவின்  வார்த்தைகளினூடே வெளிப்படும் பாரம்பரிய பெருமிதங்கள், ஜல்லிக்கட்டு என்பது அம்மக்களின் ரத்தித்திலேயே இருப்பதை, அவர்களின் இயல்பாகவே ஆகிப்போனதை உணர்த்துகிறது.
 
பிச்சிக்கும், ஜமீன்தாருக்கும் ஓரிரு பார்வை பரிமாறல்கள்.. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய குறைவான வார்த்தைப் பிரயோகங்கள் -இதன்மூலம் மேட்டுக்குடி- தாழ்ந்தகுடி அடிமைத்தனம் மிக நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கிறது. அனிச்சையாய் முன்திருப்பி எழுதிய வருடத்தைப் பார்த்தேன்- 1959. இன்றளவிலும் இந்த வர்க்க வேறுபாட்டில் பெரிய மாற்றமில்லை என்பது நாம் பெருமைக்கொள்ளத்தக்க விஷயமல்ல.
 
இயல்பிலேயே ஹீரோயிச விரும்பியான நான், நாவல் முழுதும் பிச்சி கதாபாத்திரம் மூலம் வெளிப்படும் நாயகத்தனத்தை மிக கொண்டாட்டமாய் ரசித்தேன். அப்பனின் சத்தியத்தை நிறைவேற்றத் துடிக்கும் வைராக்கியம், அப்பனை கொன்ற மிருகத்தை பழிவாங்கத் துடிக்கும் மிருகவெறி, உள்ளூர்க்கார்களிடம் பிரச்சனை வேண்டாமென தவிர்க்கும் நாசூக்கு, தன் அப்பனையும், மண்ணையும் மற்றோர் புகழ்கையில் வெளிப்படுத்தும் பெருமிதம், தன் வித்தையை இகழ்ந்தவனை அந்த வித்தையாலேயே வெல்லும் கம்பீரம், தன் இரைக்காக கடைசிவரை காத்திருக்கும் தவம், இரையை வேட்டையாடிய பின் வெளிக்காட்டும் பணிவு.. வாவ்.. இந்த பாத்திரப் படைப்பு ஒரு அமர்த்தலான ஹீரோயிச மெட்டீரியல்.

ஜல்லிக்கட்டை வெறுமனேஒரு மாடு துரத்தும் விளையாட்டாய் நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் அவசியம் ஒருமுறை இந்நாவலை படித்துப் பார்க்கவேண்டும். ஜல்லிக்கட்டென்பது வெளியிலிருந்து வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத்தான் விளையாட்டு; களத்தில் இறங்கிவிட்டால் அது உயிர் வாழ்வதற்கானதொரு போராட்டம்- மனிதர்களுக்கும் சரி.. மாடுகளுக்கும் சரி!!
 
பிரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
 
நாவலுக்கு சம்பந்தமில்லாத பின்கதை சுருக்கம்1- சிலநூற்றாண்டுகளாகத் தடைப்பட்டிருந்த என் வாசிப்பு பழக்கத்தை எனெர்ஜி ட்ரிங்க் கொடுத்து மீண்டும் உற்சாகமாய் தட்டியெழுப்பியிருக்கிறது வாடிவாசல். அவ்வகையில் சி.சு.செல்லப்பா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!
 
பி.க.சு2- திடீரென எங்கிருந்து இந்த படிப்பூக்கம் பீறிட்டுக் கிளம்பியது என யோசித்துப் பார்த்தேன்- மொபைல் நெட்பேக் தீர்ந்ததை காரணமாய் சொல்லாதிருக்க மிக விரும்புகிறேன்! ஆனால்?!!

36 comments:

  1. சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் பற்றி எஸ்.ராவின் கட்டுரை ஒன்றை படித்த நியாபகம். எஸ்.ரா அவர்களும் வாடிவாசல் பற்றி சிறப்பாய் சொல்லியிருந்தார். விரைவில் "வாடிவாசல்" படிக்க முயற்சி செய்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா மச்சி! செம்ம நாவல் :-)))

      Delete
  2. நன்றி குணா. உங்களை போலவே என் புத்தகபுழு வாழ்வில் கண்ணுபட்டு போய் முடங்கி இருக்கிறேன். உங்கள் விவரிப்பு என்னை மீண்டும் தூண்டுகிறது. படிப்பது, அதை அனுபவிப்பது என்பது சுயநலம். ஆனால் அடுத்தவருக்கு விவரிப்பது என்பது ஒரு திறமை நல்ல மனப்பான்மை. அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.வாழ்க வளர்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்! ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் அளிக்கும் பின்னூட்டன் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது :-)))

      Delete
  3. மனோசெந்தில்February 28, 2013 at 7:26 PM

    புக் நல்லாருக்கோ இல்லையோ? எனக்குத்தெரியாது. ஆனா, உன்னோட மதிப்புரை/விளக்கவுரை/முன்னுரை, அசந்துவிட்டேன்.

    நீயெல்லாம் நல்லா வருவடா!

    ReplyDelete
  4. கலக்கிடீங்க அண்ணா..
    சும்மா ஜிவ்வுன்னு இருக்கு படிக்கும் போது..
    அதுவும் கடைசி பத்திக்கு முந்தய பத்தி சும்மா அதிருதில்ல..

    சின்ன வேண்டுகோள்:நடுவுல சில பத்திகள் இட்டாலிக் எழுத்துகளில் இருக்கு. கதையின் கருவை வித்தியாசம் காட்ட என நினைகிறேன்.ஆனால் படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.வரிகளுக்கிடையே இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் தம்பி!

      சுட்டிய குறைகள் அடுத்ததடுத்த பதிவுகளில் திருத்திக்கொள்ளப்படும் :-)))

      Delete
  5. அருமையான பதிவு. எப்போதோ கல்லூரியில் படிக்கும்போது கைவந்த புத்தகம். வாடிவாசல்.. அப்படியே என் கல்லூரி நாட்களுக்கு எடுத்துச் சென்று விட்டீர்கள். வாழ்த்துகள் குணா:))

    ReplyDelete
  6. சின்னப்பையன் ட்வீட்டரில் கொடுத்த சுட்டி மூலம் இங்கே வந்தேன். உங்கள் எழுத்து அசத்துகிறது. வாடிவாசல் கண்டிப்பாக படிக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  7. குணா..படிப்பூக்கத்தில் கிட்டத்தட்ட அதே நிலையில் நானும். லௌகீகம் முற்றிலும் என்னை விழுங்கிவிட்ட நிலையில், இப்பதிவோடு மிகவும் relate செய்து கொண்டேன். படிச்சு படிச்சு நல்ல தேர்ந்த நடை வந்துருச்சு :-)

    ReplyDelete
    Replies
    1. நான்லாம் இப்போதான் லௌகீக வாழ்க்கைல அடியெடுத்து வெச்சிருக்கேன்'ண்ணே! எவ்ளோதூரம் போகுதுன்னு பார்ப்போம் :-)))

      Delete
  8. ஒரு புத்தக அறிமுகம் இப்படி தான் இருக்கணும் ! இதை விட சிறப்பா எழுத்தாளர்களால் கூட முடியாது ! பாராட்டுகள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாங்குண்ணே!
      //இதை விட சிறப்பா எழுத்தாளர்களால் கூட முடியாது///
      அவ்வ்வ்வ்! யன் இப்பூடி?? வஞ்சப்புகழ்ச்சியா எடுத்துக்கறேன் :-)))

      Delete
  9. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அறுபது பக்கங்களே கொண்ட கதையில் இவ்வளவு உள்ளதா? நாவல் அருமையாகக் இருக்கும் என்று உங்கள் விமர்சனத்தில் இருந்தே புரிகிறது :-)

    amas32

    ReplyDelete
  10. அற்புதமான பதிவு!அருமையான நடை! வாழ்த்துக்கள் குணா!!

    ReplyDelete
  11. ஹிட்லரின் "மெயின் கேம்ப்" இன்னொரு முறை படிக்க வேண்டும் போலிருந்ததால் டிவிட்டருக்கு விடுமுறை எடுத்துவிட்டு புத்தகத்தை தேடினால்.. காணூம்.. எங்கு கிடக்குதென தெரியவில்லை...சரி இருக்கின்ற புத்தகங்களை படிக்கலாமென "பல நேரங்களில் பல மனிதர்கள்" படித்து கொண்டிருந்தேன். அரிப்பெடுத்தவன் கை அனிச்சையாக சொரியப்போகுமாமே...அது போல ...புத்தகத்தை கீழே வைத்துவிட்டு கணினிக்குள் நுழைந்தால் கூகிள் தட்டியே பழகிப்போன விரல்கள்...ட்விட்டர் என உள்ளிட, சரி ஒரு எட்டு பார்த்துட்டு போவோமேன்னு உள்ளே வந்தேன்.

    ரசனை இந்த பதிவை பகிர்ந்திருந்தார். உன்னை அவர் பாராட்டுவதும்.... அவரை நாம் எல்லோருமே பாராட்டுவதும் இயல்பு என்றாலும்..ஏதோ ஒரு பொறி...படிக்க ஆரம்பித்தால் வழக்கமான குணா ஸ்டைல் முன்னுரை + முடிவுரை.

    எழுத்துக்கு அழகு உவமை. மிகச்சிறப்பாக சில இடங்களில் அதை பயன்படுத்தியிருக்க கண்டோம். வாழ்த்துக்கள். இட்டலிக் பாண்ட் பற்றி மேலே ஒருவர் கூறியிருந்தார்... என் கருத்து என்னவெனில், மிக நேர்த்தியான தெரிவு அது.

    எனக்கு உள்ள ஒரே குறை...எந்த குறையும் சொல்லாமல் விமர்சனம் எழுதியிருப்பது தான். தற்காலம் மட்டுமல்ல கற்காலம் தொட்டே விமர்சனம் என்றால் "குற்றம்" கண்டுபிடிப்பது என்று தான் அர்த்தப்பட்டு வந்திருக்கிறது. அந்த வழமைக்கு மாறாக நடந்து கொண்டால்... இது புத்தகத்துக்கு முன்னுரையோ என்று எண்ணிவிடுவார்கள்.. ஜாக்கிரதை...

    * இவ்ளோ பெரிதாக பின்னூட்டம் இட்டிருப்பதால் புத்தகம் கடனாக வேண்டும்- ஞாபகம் வைத்திருந்து மறக்காமல் படித்தவுடன் திருப்பி வாங்கிக்கொள்ளவும்

    * வெகு நாளைக்கு பிறகு மனம் போன படி எழுத வைத்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் மச்சி!

      குறைகள் பற்றி- மேலே இவ்வரிகளை சேர்க்க நினைத்து அப்புறம் மறந்துட்டேன்...
      "எவற்றிலும் குறை கண்டுபிடிக்கும் என் நக்கீர புத்தியின் படி- இந்நாவலில் ஏதேனும் தட்டுப்படுமா என யோசித்துப் பார்த்தேன்! ஒன்றுமில்லை.. என்னளவில், 101 % சிறப்பாக அமைந்த நாவலிது!"

      Delete
  12. அட்டகாசம் குணா! கொத்தமங்கலம் சுப்புவின் "ராவ்பகதூர் சிங்காரம்" படித்திருக்கிறீர்களா? பரிந்துரைக்கிறேன்!

    ashoker_UHKH

    ReplyDelete
  13. வாசிக்க வலியுறுத்துகிறது உங்கள் விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  14. அருமையான விமர்சனம் குணா, அந்நாவலை படித்தே தீர வேண்டும் போல் இருந்தது உங்கள் எழுத்து நடை. . .படிப்பூக்கம் !? சிறந்த வார்த்தை பிரயோகம். . . !

    ReplyDelete
  15. சிலநாட்களுக்கு முன்னரே இந்த பதிவு எழுதப்பட்டிருந்தாலும் வாசிப்பனுபவம் என்பதால் இந்த இரவு புத்தகத்தை படித்துவிட்டு கமெண்ட் இட்டுக்கொண்டிருக்கிறேன். இப்பதிவைப் படிக்கும் முன்புவரை நானும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுத நினச்சேன். அந்த எண்ணமெல்லாம் தூள்த்தூளாகிப்போனது. இதைவிட சிறப்பாக எழுதியிருக்க முடியாது. அனைத்துக்கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன்.

    குறுநாவல். ஆனால் அது இழுத்துச்செல்லும் வாசிப்பனுபவம் ரொம்பவே அருமை. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் சல்லிக்கட்டின் ஆரவாரத்திற்கு நடுவில் அமர்ந்து நாமும் வேடிக்கை பார்க்க தொடங்கிவிடுகிறோம்.

    * உதய்பிரபு மாம்ஸ் சொல்லும் கட்டுரை எஸ்.ரா அவர்களின் துணையெழுத்து கட்டுரைத்தொகுப்பில் வரும்.

    * RT @jroldmonk ஒரு புத்தக அறிமுகம் இப்படி தான் இருக்கணும் ! இதை விட சிறப்பா எழுத்தாளர்களால் கூட முடியாது ! பாராட்டுகள் !

    * ரகு என்னிடம் புத்தகம் வாங்கிக்கொள்ளவும். படித்துவிட்டு முடிந்தால் குறை சொல்லவும். என்னளவில் குறையில்லா மிகச்சிறந்த குறுநாவல். :-)

    கருப்பு

    ReplyDelete
  16. இன்னும் படிக்கவில்லை... ஆனால் பட்டியலில் இருக்கிறது... அருமையான முன்னுரை குணா... நன்றி மற்றும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  17. Characters pathi ennum konja details poda muttium ahh

    ReplyDelete